திங்கள், ஏப்ரல் 12, 2004

ஓடை பழைய படைப்புகள்-9

ஓடை ஏப்ரல் 2000 தாள் 4,5

கடிதம் -- கைகாட்டி

(அடுத்தவர்களின் கடிதங்களைப் படிப்பது என்றாலே ஒரு சுகமான அனுபவந்தான். கடிதங்கள் உறையிடப்பட வேண்டும் என்ற அவசியம் எதுவும் இல்லை. இதோ இரு கல்லூரி நண்பர்களிடையே கசப்பு ஏற்படுகிறது. கசப்பு கடிதமாய் உருவெடுக்கிறது. இனி............)

தெய்வா,
அனுபவம் சிறந்த ஆசிரியர். குழந்தை பிறந்தவுடன் நடந்து விடுவதில்லை. அது பலமுறை 'முயன்று, தவறி'க் கற்கிறது. ஒருவனுடைய குணம், பேச்சு, செயல் நடத்தைக்கு அவன் மட்டும் அல்லாது அவனது சூழ்நிலையும் காரணமாக அமைகிறது. நான் மற்றவர்களைப்போல் அல்லாமல் ஒரு செயலைச் செய்யப் போகுமுன் சிந்திப்பது மட்டுமில்லாது, செயல் முடிந்த பின்னும் அதனை அலசுபவன். சில சமயங்களில் கோபம் மனிதனின் நற்குணங்களை மறைத்து, அவனது முகத்தை மாற்றிக்காட்டுகிறது. தூங்கும்போது மட்டுமே மனிதன் மனிதனாக வாழ்கிறான் என்று யாரோ சொன்னது முற்றிலும் உண்மை.

சுயவிமர்சனம் என்பதைக் குறித்து எனக்குக் கவலை இருந்ததில்லை. சுய விமர்சனம் மூலமே ஒரு மனிதன் தன் தவறுகளைத் திருத்திக் கொள்ள முடியும். தன்னைத்தான் விமர்சனம் செய்ய மறுப்பவன், தன் தவறுகளை மூடி மறைப்பவன், முழு மனிதனாக முடியாது.

தேவையற்ற தற்பெருமைகளை அளந்து, 'நான் கிழித்தேன் , நீ கிழித்தாயா?' என்பதுபோலப் பேசுவது நல்லதன்று. எப்பொதும் தனது பக்கமே சரியென்று கண்ணை மூடிக் கொண்டு, ஒரு சிறிதேனும் அதனை ஆராய முயலாமல், த்னக்கு எல்லாம் தெரியும் என்று பேசுபவர்கள், அடுத்தவர் முதுகையே முறைத்துப் பார்த்துக் கொண்டு, தன் முதுகை சிறிதும் ஆராயாது விடுப்பவர்களை, நான் என் வாழ்வில் நிறையக் கண்டிருக்கிறேன். அவர்களால் இந்த உலகுக்குப் பாரமே ஒழிய எந்தவிதமான இலாபமுமில்லை.

இது தலைகளை எண்ணும் உலகம். எண்ணிக்கையில் குறைவாக இருப்பதாலேயே அறிவாளிகள் நிறைய இடர்ப்பாடுகளைச் சந்திக்க வேண்டியிருக்கிறது. தொண்ணூற்றொன்பது முட்டாள்களின் எதிர்ப்பை ஒரு அறிவாளியால் சமாளிக்க இயலுவதில்லை. எந்த் நாட்டிலுமே அறிஞர்கள் அவர்களின் வாழ்வுக் காலத்தில் மக்களால் ஏற்றுக் கொள்ளப்பட்டதில்லை. கவிஞர் சகாரா கூறுவது போல '' இன்று இந்த உலகம் அறிவாளியை அடித்துக் கொல்லும். ஐம்பது ஆண்டுகள் கழித்து அவனையே தீர்க்கதரிசி என்று கொண்டாடும்". எனவே அச்சுறுத்தும் உலகத்துக்கு அடிபணிவதால், அறிவு பயன்தராமல் போக நேருகிறது.

மனிதர்கள் தவறுகளின் கலவை. அவன் எளிதில் தவறுகளைச் செய்பவன். அறியாது தவறு செய்பவர்கள் அநியாயக்காரர்கள் அல்லர். அந்த நேரத்துச் சூழ்நிலை , சிந்தனை அவர்களை அவ்வாறு மாற்றுகிறது. நான் பல முறை வருந்தியிருக்கிறேன், எனது தவறுகளுக்காக. என்னால் சிலரது மனம் புண்படுகிறது என்பதை அறியாது பலமுறை செயல்பட்டிருக்கிறேன். யாரிடமோ செல்ல வேண்டிய கோபம் யாரிடமோ சென்று அவமானப்பட்டதும் உண்டு. அழுக்காறுகள் நம்மாலும் நேரலாம். தானாகவும் நாம் மாட்டிக் கொள்வதுமுண்டு.

ஒவ்வொரு மனிதனுக்கும் இரண்டு பக்கங்கள் உண்டு. ஒரு நாணயத்தின் இரு பக்கங்களைப் போல. பெரும்பாலான சமயங்களில் வெளித்தெரிவது- மற்றவர்களால் உணரப்படுவது, ஒரு மனிதனின் சாதாரண முகம். எப்போதாவது நெருக்கடியான சமயங்களில் வெளிப்படுவது அவனுடைய இரண்டாவது முகம். மனிதர்களுடன் பழகுவது கயிற்றின் மீது குச்சியின்று நடப்பதுபோல. பயிற்சி இன்றி நடந்தால் விபத்துகளைச் சந்திக்க நேர்ந்து விடுகிறது. கீழே விழாமல் நடப்பவர்கள் மிகக்குறைவு. கீழே விழுந்தபின்பு மீண்டும் எழுந்து நடந்து, மீண்டும் கீழே விழுவதைவிட, சிறிது நேரம் செலவழித்து, ஏன் கீழே விழுகிறோம் என்பதற்கான காரணத்தை அறிவது நல்லது. காரணத்தை அறிய மனமின்றி இருப்பவர்கள் மூடர்கள். நான் மூடர்களில் ஒருவனாக இருக்க விரும்பவில்லை.

தன்னைத்தவிர மற்றவர்கள் அனைவரும் மடையர்கள் என்று நினைப்பது நடைமுறை வாழ்விற்கு ஒத்து வராது. அடுத்தவன் என்ன சொல்ல வருகிறான் என்பதைப் பற்றிக் கவலைப்படாது, தான் தன் போக்கில் புரிந்துகொண்டு பேசித்திரிவது அறிவாளிக்கு அழகு சேர்ப்பதில்லை. பொறுமை நிதானத்துடன், குறைந்த வார்த்தைகளை அளந்து பேசுவது மிக உயர்ந்தது. மௌனம் வலிமை வாய்ந்த, எவரையும் காயப்படுத்தாத நல்ல ஆயுதம்.
தேவையான இடத்தில் தேவையான அளவில் மௌனம் காட்டுவது நமக்குப் பாதுகாப்பானது.

அறிவை, தெளிவைத் தேடிச் செல்லும் பாதை மிக நீண்டது. அதன் நடுவில் நாம் சந்திக்கும் இடையூறுகளைக் களைய முழுமுனைப்பும் காட்டாவிட்டால், தொடங்கிய இடத்துக்கே திரும்பி வர வேண்டியிருக்கும். அடுத்தவர்களை மட்டம் தட்டியே அற்ப மகிழ்வு பெறும் மனிதர்களை நாம் நம் வாழ்க்கையில் நிறையச் ச்ந்தித்துக் கொண்டிருக்கிறோம். எவன் வாயில் எப்போது விஷம் வெளிப்படும், எந்தப்புற்றில் எந்தப் பாம்பு ஒளிந்திருக்கும் என்றெல்லாம் எவருக்கும் தெரிவதில்லை. மனிதர்கள் அனைவரும் வெவ்வேறு பாதைகளில் சென்று கொண்டிருக்கிறார்கள். எல்லாப் பாதைகளும் இணையாக இருப்பதில்லை. எங்காவது குறுக்கில் கடக்க வேண்டியிருக்கிறது. அந்தச் சமயங்களில் அடுத்தவன் மீது மோதிவிடாமல் எச்சரிக்கையுடன் செல்வது எல்லோருக்கும் நல்லது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக