திங்கள், ஏப்ரல் 12, 2004

ஓடை பழைய படைப்புகள்-11

ஓடை ஏப்ரல் 2000 தாள் 8

காதல் ஓவியம் ---கைகாட்டி

இது இரவின் விடியலா?
அல்லது
பகலின் முடிவா?

இந்தஒற்றை மனிதனின்
செதுக்கப்படாத மனத்தில்
விடி விளக்கை ஏற்றி வைத்தது யார்?

இந்த விளக்கின் திரியில் பின்னப்பட்டிருப்பது
உன்மீது கொண்ட
என் தீராக் காதலல்லவா?

உன் உறவின் உயிர்ப்பில்,
கருகிக்கிடந்த
என் பாலை மனத்தில்
பசுந்தளிர் துளிர்ப்பதின்
ஓசை அலைகளை
உணர முடிகிறதா
உன்னால்?

நேசத்துக்கு நீட்டிய கரம்
பாசத்தில் நனைந்ததேன்?

உனது விழிகளில்
தொக்கி நிற்கும்
அந்தக் கேள்விக்கு
என்னால்
எப்படி விடையளிக்க முடியும்?

உன் உதடுகள் துடிப்பதும்,
என் உதடுகள் துடிப்பதும்
ஒரே வார்த்தையை
உச்சரிக்கத்தானா?

இந்த சப்பாத்திக்கள்ளியின்
முள்ளின் நுனியில்
பூமொட்டுகளைக்
கண்டு பிடித்தது யார்?

இந்தக் காட்டாற்று வெள்ளத்துக்கு
எப்படி
ஒரு தாமரை
மதகாய் அமைந்தது?

என் இதயக்கதவுகள்
திறந்தே இருப்பது
எந்தத் தென்றலின் வருகைக்காக?

இந்த மலை கரைவது
ஒரு பூவின் புன்னகையிலா?

எந்தக் குயிலின் வருகையினால்
இந்தக்காடு சோலையானது?

இந்தப் பாழ்மண்டபம் கோயிலானது
எந்தப் புறாவின் பாடலில்?

இந்த குயில்கள்
யாரிடம் பாடலை யாசித்து நிற்கின்றன?

இந்தப்பூக்கள்
எவர் கூந்தலின் மணத்தைக் கடன் கேட்கின்றன?

யாருடைய மேலாடைக்காக
இந்த வெண்மேகங்கள் இறங்கி வருகின்றன?

யருடைய கால் நனைக்க
இந்த நதி பாதை மாறி வருகிறது?

இந்த இரவு ஓடி வருவது
யாருடைய கண் மைக்காக?

அந்த நிலா ஓடி வருவது
யாருடைய முகத்தில் தன் முகம் பார்க்க?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக