வியாழன், ஏப்ரல் 08, 2004

மழை 3 துளி 17

போர்க்களத்திலிருந்து - கர்ணன்
என் அன்புள்ள நண்பர்களுக்கு "சங்கமித்திரா" சிறுகதையை ''ஓடை(printed version)"யில் படித்தவர்களுக்கு இந்த கவிதை ஏற்கனவே படித்தது போன்று தோன்றும்.நிலவிவரும்"போர்ச்சூழல்" கருதி சிறுகதையை சிலமாற்றங்களுடன் தருகிறேன். அமெரிக்கா-ஆப்கன் யுத்தத்தின்போது எழுதப்பட்டது


ஹிம்சையை
அடியோடு அழிப்பதாய்
ஆயுதங்களோடு புறப்பட்டுவிட்ட
அஹிம்சாவாதிகளே
நீதியின் கண்களே!

உங்கள் உயிர்களை
நேசிப்பவர்களே!

இதோ இடிந்துபோன வீட்டுக்கடியில்
பதுங்கு குழியிலிருந்து
குரல் கொடுக்கும் நான்

அதோ
என் அடுத்தவீட்டு நண்பன்
தூணோடு துணையாய் கிடக்கிறானே!
மரித்துபோனவனுக்கு அருகில்
அவன் மனைவி
அழுகிறாளா?பயப்படுகிறாளா?

உங்கள் தொலைக்காட்சிக்கு
முகம் காட்டுகிறானே
பயந்த விழிகளுடன் அந்தச்சிறுவன்

இவைகளெல்லாம் உயிர்களில்லையா?

உடலில் இருந்து
உயிர் வலுக்கட்டாயமாய்
பறிக்கப்படுவதுதான் நீதியா?

உயிர்களின் மீது
ஊழிக்கூத்து நடத்திதான்
அதர்மத்தின்
ஆணிவேர் பிடுங்கப்படுமா?

பூமிக்கு இரத்தச்சாயம்
பூசுவதுதான்
விடுதலையா?புனிதப்போரா?

ஏ?
உயிரில்லா தெய்வங்களே
உயிர் கொடுத்துதான்
உங்கள் புனிதம் காக்கப்படுமா?

இரத்தம் குடிக்கும் மதங்களே!
மனிதனை மனிதன்
அழித்துக்கொண்டு
எலும்புக்கூடு மண்டையோடுகள் மட்டும்
நிறைந்த பூமியில்
உங்கள் தெய்வங்கள்
என்ன நீதி செய்யும்?

ஏ! விஞ்ஞானமே
உன் அசுர கை கொண்டு
அனைவரையும்
அள்ளி புதைத்து போ

பின்
புல் பூண்டிலிருந்து
தொடங்கட்டும்
பரிணாமம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக