வியாழன், ஏப்ரல் 08, 2004

மழை-3, துளி-10

மந்தணம் --சகாரா
(' நதிக்கரையில் தொலைந்த மணல் ' கவிதைத் தொகுப்பு )


பிழைகள் அடுக்கப்பட்ட
பெருமிதப் படிக்கட்டுகள்

வணக்கங்கள் சார்சார்கள்
வழியும் வாயில்கள்

வாயும் செவியுமற்ற
சாயச் சுவர்கள்

கோப்புக் குப்பைகள்
பிதுங்கும் அலமாரிகள்

பித்தலாட்டங்களைப் பாதுகாக்கும்
பீரோ மறைவிடங்கள்

காரிருள் சப்பிப்போட்ட
குருட்டு மின்விளக்குகள்

கவர்கள் முன்மொழியாத மனுக்களை
இழுத்தடிக்கும் கடிகாரங்கள்

லீவுநாள் பார்க்கவென்றே
தொங்கிச் சாகும் காலண்டர்கள்

லஞ்சக் கறை படிந்த பெஞ்சுகள்
மேசை டிராயர்கள்

மனிதம் அறியாத
மொன்னை நாற்காலிகள்

புளுகுகளை நகலெடுக்கும்
ரோனியோ, டைப்ரைட்டர்கள்

சம்பள விகிதத்தைச் சரிபார்த்தே
சலித்துப்போன கால்குலேட்டர்கள்

குப்பைக் கூடைகளால்
குதறப்பட்ட கெஞ்சல்கள்

இரக்கம் வழிய மறுக்கும்
அரக்க எழுதுகோல்கள்

ஆணைகள் தெளிக்கப்பட்ட
சாணிக் காகிதங்கள்

கூக்குரல் எழுப்பும்
கோரிக்கை விண்ணப்பங்கள்

மிரட்ட முடியாமல் தவிக்கும்
சுற்றறிக்கைகள்

எந்த ரெகமண்டேசனையும் கரைக்கும்
ரெடிமேட் பதில்கள்

காலில் விழுந்தாலும்
கைவிரிக்கும் ரூல்சுகள்

தனக்கென்றால் இடுப்பொடிந்து
தலைவணங்கும் சட்டங்கள்

வேறொன்றுமில்லை இது
ஓர் அரசு அலுவலகத்தில்
ஏகமாய்
இ(றை)றந்து கிடக்கும் தளவாடங்களின்
சிறுகுறிப்பே

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக