திங்கள், ஏப்ரல் 12, 2004

ஓடை பழைய படைப்புகள்-7

ஓடை ஏப்ரல் 2000 தாள் 3

பூக்களின் கதை --கர்ணன்

பூக்களைப் பற்றி
உனக்கு அதிகமாகவே தெரியும்
வண்ணங்கள் பார்த்து,
வாசனைகள் முகர்ந்து
கனகாம்பரம்
குண்டுமல்லி
நீதான் பெயரிட்டாய்

உனக்குப் பிடித்தவை
மஞ்சள் பூக்கள்
பெரும்பாலும் உன்னைச்சுற்றி
பூக்கள் இருக்கும்படி
பார்த்துக் கொள்கிறாய்

பூக்கள் வாசமிக்கவை என்கிறாய்
பூக்கள் விதைகளின் ஆதாரம்
பூக்கள் ரசிக்கத்தக்கவை
பூக்களிடமே பாராட்டுகிறாய்

மகரந்தப் பூக்களுக்கு
சூலகம் தேடும் வெறியைத் தூண்டுகிறாய்
மது சமைக்கும் பூக்களுக்கு
போதையூட்டுகிறாய்

ஓர் இனிய பொழுதில்
தங்கள் இனிய வாசம் ஏந்தி
உன் வாசற்படியில் சில பூக்கள்

நீயோ
கதவுகளைப் பூட்டிக்கொள்கிறாய்
திறப்பதேயில்லை

உன் பேர் சொல்லி மணக்கும்
பூக்களை நீ
உன் கூந்தலில் வைத்துக் கொள்வதுமில்லை

இறுதியில்
பூக்களுக்கு
சருகு
பெயர் மாற்றம் செய்வதும் நீதான்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக