திங்கள், ஏப்ரல் 12, 2004

ஓடை பழைய படைப்புகள் 13

ஓடை மே 2000 தாள் 1

ஓர் மழை நாள் -நா.வெ.ரா

வயல்வெளித் தீவில்
பறவைகளின்
மழைக்காலக் கூட்டத் தொடர்,
ஒழுகாத கூரைகள் வேண்டியோ?

மூச்சையடக்கி
முங்கிக் குளித்து,
வெய்யிலின் வெம்மை தீர்க்க
குட்டை நோக்கி
எருமைகளின் குட்டிப் பேரணி!

பருவம் சுமந்த பாவையாய்
தரை நோக்கி, தலை குனிந்து
நீர்த்திவலைகள் சுமந்த புற்கள்
என்ன வெட்கமா?

பூமிக்குக் குடைபிடிக்க
வேர்பிடிக்கும் காளான்கள் !
வெய்யில் குறைந்து விட்டதா?
மண்ணை முட்டி
விண்ணை எட்டிப் பார்க்கும் பூக்கள் !

சற்று முன்கூட்டியே வரக்கூடாதா?
எப்படிக் கறுத்துவிட்டேன் பார்!
உடலைச் சிலுப்பி
மழையிடம் கரையும்
நனைந்த காகம்!

என்னப்பா,
சற்றுப் பரந் து விரியக்கூடாதா?
மழைக்கு ஒதுங்கலாமில்லையா?
நாய்க்குடையிடம் நாய்

ஐயையோ! அம்மா திட்டுவாள்,
மழையில் நனைந்தால்
சளிப்பிடிக்கும்
குடை - மன்னிக்கவும்,
தோகை விரிக்கும் மயில்கள்.

அம்பின்றி என்ன பயன்?
மழை நம்மை விரட்டுமுன்
நாமே மறைந்து விடுவோம்!
தூரத்தே எட்டிப் பார்க்கும்
வானவில்!

என்னப்பா,
அருகில் மனைவியின்றி
மழை வந்து என்ன பயன்?
தர்க்கம் செய்யும் தவளைகள்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக