சனி, அக்டோபர் 28, 2006

மழை - 5 துளி - 6

பொறாமை -புலியூர் முருகேசன்


எனக்குள்
பொறாமை மட்டுமே
மீதமாயிருக்கிறது.

கழிந்த நாட்களில் சுழன்ற காற்றாய்
வலம் வந்த அதே நான்தான்
கிழிந்த ஓவியமாய் இன்று
கலைந்து கிடக்கிறேன்

மற்றெப்பொழுதையும் விட
மற்றவர்கள் நிதானமாய்-
நம்பிக்கைத் துரோகம்
செய்து கொண்டிருக்கிறார்கள்

இமைகள் கருகக் கருக..
குளிர் காய்கிறேன்-
மூக்குத் துவாரங்கள் திணறத் திணற
சேற்றில் மூழ்கிக் கொண்டிருக்கிறேன்

என்னைக் குழிக்குள் புதைக்கும்
முனைப்போடு பல கைகள்
முன்பை விட பலத்தோடு
மண்வெட்டியை உயர்த்திப் பிடிக்கின்றன

நான் எல்லாம் இழந்தும்
எதையும் இழக்காமல் இருக்கிறேன்

மிகைப்படுத்தத் தெரியாத பிரியம்
அலங்காரமில்லாத அன்பு
எதிர்ப்பில்லாத சகிப்புத்தன்மை
தோள்களில் எந்நேரமும் கனக்கின்ற சிலுவை

எல்லாம் என் சேமிப்புகளென
பெருமிதத்தோடு நிமிர்ந்தேன்
செல்லாக் காசுகளென அவை
எல்லோராலும் தீர்மானிக்கப்பட்டது தெரியாமல்.

வார்த்தைகளால் முகத்தில் அறையச் செய்யும்
வித்தையைக் கற்றுக்கொள்ளவே முடியவில்லை.

மவுனத்தால் கேலி செய்யும் கலையும்
கைவரவில்லை -

எனக்குள் பொறாமை மட்டுமே
மீதமாயிருக்கிறது .....

வியாழன், அக்டோபர் 26, 2006

மழை - 5 துளி - 5

பங்குச்சந்தை -சகாரா


அழகான பொம்பள
அரக்கும் கிரைண்டர் ஓட்டினா(ள்)
சோக்கான பொம்பள
சோப்புக் கட்டிய ஆட்டினா(ள்)

நீலச் சேலக் காரியோ
நீலம் போட்டுக் காட்டினா(ள்)
பச்ச சேலக் காரியோ
பவுடர் டப்பா நீட்டினா(ள்)

பொங்கலுக்குச் சேலவிய்க்கும்
பொம்ம கூடப் பொம்பள !
பண்டிகையாம் தீபாவளிக்குப்
பட்டாசெல்லாம் பொம்பள !

விளம்பரமே வாழ்க்கையின்னு ஆனது !
பொம்பள
விதிகூடப் பணமாகிப் போனது !
(நன்றி: கவிஞர் சகாராவின் 'முள்ளின் நுனியிலும் ஆகாயம்' கவிதைத் தொகுப்பு)

செவ்வாய், அக்டோபர் 24, 2006

மழை - 5 துளி - 4

சுதந்திரப் பறவை - அ.சிவகாமசுந்தரி

அந்தப் பறவை - ஒரு
சுதந்திரப் பறவை
எந்த கூட்டிற்குள்ளும்
அது அடைக்கப்படவில்லை
அதன் தேவைகள்
எதற்கும் தேடிப்போக
அவசியமின்றி நின்ற இடத்திலேயே
கேட்டுப் பெறும் சொகுசான
வீட்டுக்காற்றை சுவாசிக்கும்
அந்தப் பறவை - ஒரு
சுதந்திரப் பறவை

சிறுவயதில் ஏனோ அதன்
சிறகுகள் மட்டும்
முழுமையாய் வளருமுன்
முளையிலேயே வெட்டப்பட்டன.
பெரியதாய் வளர்ந்ததும்
பறக்க முயற்சித்ததால்
சிறகுகளுடன் சேர்ந்து
கால்களும் காணமல்போயின.

பறப்பதையே மறந்து
நடக்கவும் அறியாது
பிள்ளைகள் விளையாட
பார்ப்பவர்கள் பாராட்ட
பெருமையுடன் காட்சிப்பொருளாய்
நின்ற இடத்திலேயே நிற்கும்
அந்தப் பறவை - ஒரு
சுதந்திரப் பறவை!

-அ.சிவகாமசுந்தரி

ஞாயிறு, அக்டோபர் 15, 2006

மழை - 5 துளி - 3

எழுதாத கவிதை --- கைகாட்டி


இந்த நாள் இத்தனை விரைவில்
வருமென்று நான் எதிர்பார்க்கவில்லை

நான் தோல்வியினை எதிர்பார்த்திருக்கவில்லை,
ஏனெனில்
எதிரிகள் யாரும் எனக்கு இருந்திருக்கவில்லை.

நான் கனவிலும் நினைத்திருக்கவில்லை,
என் ஊன்றுகோல் உளுத்துப் போகுமென்று ;
என்றுமே எதிர்பார்த்திருக்கவில்லை,
என் இதயம் விழுந்து நொறுங்குமென்று.

இலவு வெடித்துவிடுமென்று தெரியும்தான் எனக்கு,
ஆனால் பூவிலே வெடிக்குமென்று அல்ல.

நான் அரிதாரம் பூசுமுன்பே
இங்கு விடிந்துபோய்விட்டது
இந்த பணம் அச்சடிக்குமுன்பே செல்லாததாகிவிட்டது.

உனக்கு என் இதயத்தை விளக்க ஓடி வந்தபோது
வாயிலிலேயே தெரிந்துகொண்டேன்,
வாய்ப்பில்லையென்று.

போட்டியில் கலந்துகொள்ளத்தான் தயாரானேன்.
அரங்கத்தின் வாசலிலேயே அறிந்துகொண்டேன்,
அனைத்தும் முடிந்துவிட்டதென்று.

தொலைபேசியின் மணி ஒலித்தபோதெல்லாம்
முன்னிருந்த ஒரு துள்ளல்
ஒரு இனம்புரியா எதிர்பார்ப்பு
எல்லாம் முடிந்தாயிற்று,
எல்லாம் முடிந்தாயிற்று.

எனக்கு அழத்தெரியவில்லை
இனம்புரியாத துக்கம்
என்னுள் பிரளயமாய்.

ஏனோ தெரியவில்லை, கண்களில் மட்டுமல்ல,
எனது பேனாவிலும் கசிவு.

தவறு செய்துவிட்டேன்
கவிதை புரியாத உனக்கு,
காதல் புரிய வாய்ப்பேயில்லை.

மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன்
என் காதலைச் சொல்லி
எந்தக் குழப்பத்தையும் உன் வாழ்வில் ஏற்படுத்திவிடவில்லை

காலம் கடந்து புரிந்துகொண்டேன்
வழிகாட்டத்தான் எனக்கு விதிக்கப்பட்டிருக்கிறது,
பயணம் செய்ய அல்ல.
---கைகாட்டி (ஏப்ரல் 25 , 2000)

திங்கள், அக்டோபர் 02, 2006

மழை - 5 துளி - 2

சாவி -சகாரா

வானிலிருந்து அருவி விழுகிறது
உச்சியைப் பேர்த்தபடி !
புள்ளிமானின் துள்ளலாய்த்
தெறிக்கிறது நுரை !
பிளவுபடாமல் தாங்கும் பாறை உருண்டைகள்
குளிக்கின்றன-
யானைகளைப் போல.

பூக்கள் மிதந்து வருவதில்
வண்ணத்துப் பூச்சிகளின் வசீகரம் !

வேர்விட்டு நீர் உறிஞ்சும் மரங்கள்
முகத்தில் புன்னகையோடு !

குரங்குகள் குதூகலித்துத் தாவும்
கிளைக்குக் கிளை- அழகை இரசித்தபடி !

ஓடும் நீரருகே -
செடிக் காம்புகளில் மலரும்
புதிய பூக்கள் !

வருகிற தென்றலின் சிலுசிலுப்பில்
பரவுகிறது எங்கும் மணம்
தாங்க முடியாமல் ஆடுகிறது செடி.

மறைவில்
மலம் கழிக்கிறான்
மனிதன் !

( பூங்குயில் செப். - அக். 96)
(நன்றி: கவிஞர் சகாராவின் 'முள்ளின் நுனியிலும் ஆகாயம்' கவிதைத் தொகுப்பு)

ஞாயிறு, அக்டோபர் 01, 2006

மழை - 5 துளி - 1

இலையின் கழுத்தொடிந்து
இரத்தம் கசியும் கைகளோடு வரும்
இந்தக் காற்று அழுந்தி மோத-
ஆடைகளோடு சேர்ந்து சதைகளும்
பிய்ந்து போகும்.
இருதயம்,இரைப்பை,குடல் என
எல்லாம் அறுந்து எங்கோ போய் விழும்.
பட படவென எலும்புகள் முறிந்து
எரிபடும் நிகழ்வு அறிய செவியும் இல்லை
விழியும் இல்லை.
ஊசிகளில் குத்திக் கிழிபட்டு நறுக்கித் தூவிய
மழைமேகம் மாதிரி தலைமுடி மூளையோடு
சிதறலாகும்.
இன்னும் இலையின் கழுத்தொடித்து
இரத்தம் கசியும் கைகளோடு வரும் காற்று;

திரியைத் தின்னாமலும் என்னைக் குடிக்காமலும்
உயிர்த் தீபம் ஒற்றையாய் நின்று எரியும்.
அறுபடாமல்...
அணைந்து விடாமல்...
- புலியூர் முருகேசன்

செவ்வாய், செப்டம்பர் 26, 2006

மழை 4 சுட்டிகள்


வரிசை எண் படைப்புபடைப்பாளி வகை
மழை 4 துளி 1 மொழிபெயர்ப்புகைகாட்டி கவிதை
மழை 4 துளி 2 திரைப்பட விமர்சனம்துடிமன்னன்விமர்சனம்
மழை 4 துளி 3 எல்லைகள் என்பது முடிவு அல்ல அ.சிவகாமசுந்தரி கவிதை
மழை 4 துளி 4 மறுபடியும்புலியூர் முருகேசன்கவிதை
மழை 4 துளி 5 தொடங்கட்டும் புதுப்புரட்சி சித்ரா விஸ்வநாதன்கவிதை
மழை 4 துளி 6 கடிதம்வே.பிச்சைமுத்துகடிதம்
மழை 4 துளி 7 கனவு (மட்டுமே) காணுங்கள்ம.ஜெயப்பிரகாஷ வேல் கட்டுரை
மழை 4 துளி 8ஒரு கேள்வி துடிமன்னன்கட்டுரை
மழை 4 துளி 9 தேவை ஒரு கருத்து(இயல்) மாற்றம்கைகாட்டிகடிதம்
மழை 4 துளி 10 இணையமும் காகிதமும் கைகாட்டிகட்டுரை

திங்கள், செப்டம்பர் 25, 2006

மழை 4 துளி 10

இணையமும் காகிதமும் (செவ்வாய், ஏப்ரல் 27, 2004 )

வலைப்பூவில் திரு கண்ணன் எழுதிய கட்டுரை படித்தபோது ஏற்பட்ட உணர்வுகளை இங்கு பகிர்ந்து கொள்கிறேன். திரு கண்ணனைப் போலவே நானும் இது பற்றி சிந்தித்திருக்கிறேன் (கொஞ்சம் வேறு பாதையில்). காகிதங்களில் வெளிவந்து கொண்டிருக்கும் சிற்றிலக்கியங்களில் உள்ள நல்ல படைப்புகள் இணையத்திலும் இடம் பெற வேண்டிய தேவையைப் பற்றி ஏற்கனவே ஒரு கடிதம் எழுதியிருக்கிறேன். சில நல்ல நூல்களைப் படிக்கும்போது இதனை இணையத்தில் அனைவரிடமும் பகிர்ந்துகொள்ள முடியுமானால் எவ்வளவு நன்றாக இருக்கும் என்று தோன்றுவதுண்டு. அதே நேரத்தில் இணையத்தில் சில நல்ல கட்டுரைகளைப் பார்க்கும்போது இது இணையத் தொடர்பற்ற பொதுமக்களால் படிக்க முடிந்தால் எவ்வளவு நன்மை விளையும் என்றும் நினைத்ததுண்டு. இப்போதெல்லாம் , அனைத்து நூல்களும் கணினியில் ஏற்றப்பட்டுத்தான் அச்சிடப்படுகின்றன. ஏற்கனவே கணினியில் ஏற்றப்பட்ட நூல்களை இணையத்தில் ஏற்றுவதில் அதிகப் பிரச்சினை இருக்கப் போவதில்லை. தேவை ஒரு விழிப்புணர்வும் கருத்து மாற்றமும் அவ்வளவே. திரு கார்த்திக் குறிப்பிட்டதுபோல இன்தாம் இணையத் தளத்தில் இருக்கும் நிறையப் பக்கங்கள் பயன்படுத்தப்படவில்லை என்பதே உண்மை. இன்தாம் நூலகத்தில் கொடுக்கப்பட்ட புத்தகப் பட்டியல்கள் மிகவும் பழையவை. இணையம் இன்னும் பரவி எல்லா ஊர்களையும் அடய வேண்டும், குறைந்த செலவில் அனைத்துத் தள மக்களும் இணையத்தைப் பயன்படுத்தும் வாய்ப்பு உருவானால், இந்த இடைவெளி குறைய வாய்ப்பிருக்கிறது. ஆனால் இந்த நிலை வர இன்னும் பல ஆண்டுகள் ஆகும் அது வரையில் இணையத்தில் எழுதி வரும் நண்பர்கள், செய்தித்தாள்கள், சிற்றிதழ்களிலும் எழுத வேண்டும் என்பதே என் கருத்தும். நிறைய நல்ல சிற்றிதழ்கள் வந்து கொண்டிருக்கின்றன . சொந்தமாக எழுதவில்லையாயினும், மொழிபெயர்த்தும் எழுதலாம். சிற்றிதழ் நடத்திவருபவர்களுக்கும் இணையத்தின் பயன்பாடுகள் புரிய வரும். இணையத்தில் தமிழ் இலக்கியம் என்ற தலைப்பில் எழுத வேண்டும் என்று நீண்ட நாட்களாக நான் யோசித்து வந்திருக்கிறேன். ஆரம்பிக்காமல் காலத்தை இவ்வளவு நாள் கடத்தி வந்திருக்கிறேன் (கொஞ்சம் என்மீதே எனக்குக் கோபமும் உண்டு ), சீக்கிரம் எழுதுவேன் (எல்லாம் ஒரு நம்பிக்கைதான்!!!) இப்போது சிற்றிதழிலிருந்து இணையத்துக்குப் படைப்புகளைக் கொண்டுவருவது பற்றி சில கருத்துக்களைப் பார்ப்போம். இந்த நல்ல நிகழ்வு ஈடேறாமலிருப்பதற்கு சில காரணங்களை நம்மால் பட்டியலிட முடியும். அவை
1. இணையம் பற்றிய அறியாமை
2. நம்பிக்கையின்மை
3. விற்பனை/ உரிமை குறித்தான பிரச்சினைகள்
4. உதவ யாரும் இல்லாதது

1. இணையம் பற்றிய அறியாமை:
90 விழுக்காட்டு இலக்கியவாதிகள் இணையம் என்ற பெயரை காதில் மட்டுமே கேட்டிருக்கிறார்கள். பார்த்ததில்லை. அதனால் இணையம் என்பது ஏதோ பெரிய பேய்கள் உலாவும் மாளிகை என்பது போன்ற பயமும், தெளிவின்மையும் உள்ளது. இவர்களில் நிறைய பேர் தெரிந் துகொள்ள முயல்வதுமில்லை என்பது ஒரு பரிதாபம். “அதெல்லாம் நமக்கு வராதப்பா, இதே போதும் “ என்று வசனம் பேசும் பலரை நான் பார்த்திருக்கிறேன். இங்கு தேவைப்படுவதெல்லாம் ஒரு கருத்து மாற்றமே.

2. நம்பிக்கையின்மை
“உங்கள் படைப்புகளைக் கொடுங்கள், இணையத்தில் வெளியிடலாம்” என்று கேட்டால் எவ்வளவு தெரிந்தவராக இருந்தாலும் நிறையப் பேர் கொடுக்க முன்வருவதில்லை. நேரடியாகச் சொல்ல முடியாமல் “எல்லாக் கவிதைகளுக்கும் தலைப்பு எழுதி மொத்தமாக உங்களிடம் தருகிறேன்” என்று கூறி இரண்டு வருடங்களாக இன்னும் தலைப்பு எழுதிக் கொண்டிருக்கும்(??) சில படைப்பாளிகளை நான் சந்தித்திருக்கிறேன். இவர்களுடைய பயமெல்லாம் எங்கே நாம் அதை நமது பெயரில் வெளியிட்டு விடுவோமோ, கருத்துத்திருட்டு நடக்குமோ, இணையத்தில் யார் படிப்பார்களோ, யாரெல்லாம் தன் கருத்துக்களை அவர்கள் கருத்துக்களாக பயன்படுத்திக் கொள்வார்களோ என்பவைதான். இதனாலேயே இன்னும் இருட்டு அறைகளுக்குள் இரும்புப் பெட்டிகளில் தூங்கிக் கொண்டிருக்கும் நல்ல படைப்புகள் பல. என்னைப் பொறுத்தவரை கருத்துத் திருட்டு என்பது தடுக்க முடியாத ஒன்று. அதுவும் இணையம் போன்ற ஒரு கட்டற்ற கடலுக்குள் இதனைத் தடுக்க முடியாது, தன்மரியாதை உடைய எழுத்தாளர்கள் யாரும் இதில் ஈடுபடப் போவதுமில்லை. (திருட்டுக்கு பயந்து நகை போட்டுக்கொள்ளாமலா இருக்கிறார்கள் மக்கள்?) . தன் படைப்பு வெளியாக வேண்டும் என்ற ஆர்வமுடைய எவருக்கும் இந்தக் காரணம் ஒரு தடையாக இருக்கப் போவதில்லை
3. விற்பனை/ உரிமை குறித்தான பிரச்சினைகள்
இது கொஞ்சம் விரிவாக விவாதிக்க வேண்டிய ஒரு பிரச்சினை. ஏற்கனவே நூலாக வெளியான படைப்புகளை திரும்ப மின்வடிவிலும் கொண்டுவருவதிலும் இந்தப் பிரச்சினை இருக்கிறது. ஒரு நூலை இணையத்திலும் வெளியீடு செய்வதாக எடுத்துக் கொள்வோம். இணையத்தில் படிக்கும் வாய்ப்புக் கிடைத்தவர்கள் நூலை விலை கொடுத்து வாங்கப் போவதில்லை. மேலும் மின்னஞ்சல் வழியாக நண்பர்களுக்கெல்லாம் அனுப்பவும் வாய்ப்பிருக்கிறது. இதுவும் விற்பனையை பாதிக்கும் என்ற கருத்து இருக்கிறது. என்னைப் பொறுத்தவரை காகித வடிவிலான நூலைப் படிக்கக்கூடிய வாசகர்களின் எண்ணிக்கையுடன் ஒப்பிடும்போது இணையத்தில் படிப்பவர்களின் எண்ணிக்கை மிகவும் குறைவு. மேலும் சொந்தமாகக் கணினி இல்லாதவர்கள் காசுகொடுத்து இணையம் பார்க்கின்ற சமயங்களில், மின்வடிவிலான படைப்புகளைப் படிக்க வாய்ப்புகளில்லை. எனவே என் பார்வையில் இணையத்திலும் நூல் வெளிவரும்போது படைப்பாளிக்கு/பதிப்பாளருக்கு எந்த இழப்பும் இல்லை. மாறாக

அ) இணையம் வழியாக நல்ல வாசகர்கள் நிறையப் பேரை சம்பாதிக்க அவர்களால் முடியும்.

ஆ) நூலைப்பற்றி நிறைய விவாதங்கள் இணையத்தில் நடக்க வாய்ப்பிருக்கிறது. இது படைப்பாளிக்கும், பதிப்பாளருக்கும் நன்மையே தரும்.

இ) படைப்பின் வழியாக வரும் வருமானத்தில் வாழவேண்டிய நிர்ப்பந்தம் இல்லாதவர்களுக்கு இதனால் எந்த இழப்பும் இல்லை

ஈ) மின்வடிவத்தில் வராவிட்டால் வெளிநாட்டு வாசகர்கள் நிறையப் பேர் படிக்கப் போவதில்லை. (40 ரூபாய் நூலுக்கு அஞ்சல் செலவு எவ்வளவாகும் ??) ஊருக்கு வரும்போது வாங்கிக் கொள்ளலாம் என்று தள்ளிப் போட வாய்ப்பிருக்கிறது. அவர்கள் ஊருக்கு வரும்போது, நூல் கிடைக்காது என்பது வேறு விசயம்

உ) உண்மையாலுமே வறுமையிலிருக்கும் படைப்பாளிக்கு வாசகர்கள் உதவி செய்யாமல் போய்விடுவார்களா என்ன?

ஊ) Open Source நோக்கி உலகம் நடந்து கொண்டிருக்கும்போது மின்வடிவ நூலுக்கு விலை என்பது விவாதத்துக்குரிய விசயமே.

எ) மிக நல்ல படைப்பாக இருப்பின் அது மொழிபெயர்க்கப்பட்டு வேறு மொழிகளுக்குச் செல்லவும் வாய்ப்பிருக்கிறது

4. உதவ யாரும் இல்லாதது இணையத்தில் நூலை வெளியிடுவதில் உதவ / பாலமாக இருக்க யாரும் இல்லாததாலும் சிலர் வெளியிட இயலாமல் இருக்கலாம். இது இணையத் தொடர்புடைய நாமனைவரும் இறங்கிப் பணி செய்ய வேண்டிய ஒரு பிரச்சினை
**இது நேரமின்மையால் பிழை திருத்தப்படாத / சீரமைக்கப்படாத கட்டுரை

மழை 4 துளி 9

தேவை ஒரு கருத்து(இயல்) மாற்றம் -திங்கள், ஏப்ரல் 05, 2004

அன்புடன் பயணம் புதிது இதழாசிரியர் அவர்களுக்கு,
நலம். நமக்குள் கடிதப் பரிமாற்றங்கள் நடந்து வருடங்களாகின்றன. திரு சகாரா எழுதி தங்களது முயற்சியில் வெளியான “ நதிக்கரையில் தொலைந்த மணல் ” கவிதைத் தொகுப்பு வெளியீட்டு விழாவில் (புலியூர், ஜூலை 2001) “இணையத்தில் தமிழ் இலக்கியம்” என்ற தலைப்பில் ஒரு உரையாடல் நடத்தும்படி நீங்கள் என்னைக் கேட்டுக்கொண்டீர்கள். உண்மையைச் சொல்லப் போனால் அந்த நேரத்தில் இணையத்தில் தமிழ் தொடர்பாய் நடந்து கொண்டிருந்த நிகழ்ச்சிகள் குறித்து எனக்கு இருந்த அறிவு மிகக்க் குறைவே. இருப்பினும் அந்த நிகழ்ச்சிக்காக நான் தயார் செய்யும் போதுதான் “இணையத்தில் தமிழ் இலக்கியம்” என்ற தலைப்பு எவ்வளவு பெரிய கடலுக்குள் என்னை நீந்த வைக்கக் கூடிய முயற்சி என்பது எனக்கே விளங்கியது. எனக்கிருந்த கால அவகாசக் குறைவால் என்னால் அதிகம் தயார் செய்ய இயலவில்லை. இருப்பினும் திருச்சி வானொலி நிலையத்தில் அதிகாரியாகப் பணியாற்றிக் கொண்டிருந்த திரு தட்சிணாமூர்த்தி அவர்களுடன் சேர்ந்து நான் கலந்து கொண்ட அந்த உரையாடல் நன்றாக இருந்ததாக நிறையப் பேர் பாராட்டினார்கள் .


uraiyaadal


ஆனாலும் எனக்கென்னவோ நான் நிறையச் செய்திகளை மக்களுக்குக் கொண்டு சேர்க்கவில்லை என்ற மனக்குறை இருந்து கொண்டே இருந்தது. நமது பயணம் புதிது இதழில் இந்த தலைப்பில் ஒரு தொடர் கட்டுரை எழுதலாம் என்று நான் ஆவல் கொண்டேன். இருப்பினும், அந்த நல்ல காரியம் நடை பெறாதபடிக்கு நிறைய தடங்கல்கள் ஏற்பட்டன. எழில் மாதவனின் திடீர் மரணம், திரு சகாரா அவர்களின் இடமாற்றம், எனது திருமணம் என்பது போல ஏகப்பட்ட மாறுதல்களில் இதழுக்கும் எனக்குமான இடைவெளி மிகவும் அதிகமாகி விட்டது. இவற்றிற்கு இடையில் தங்கள் கவிதைகள் சிலவற்றை நான் கணினியில் ஏற்றியது, தமிழ்நாடு முழுமைக்கும் ஆரம்பப்பள்ளிகளில் வாழ்க்கைக்கல்விப் பாடத்திட்டத்தைப் புகுத்துவதில் மும்முரமாகப் பணியாற்றிக் கொண்டிருந்த திரு மணமேடு குருநாதன் அவர்களின் கவிதைகள், உரை வீச்சுக்கள் முதலானவற்றை இணையத்தில் ஏற்றம் செய்ய விரும்பி திரு மாரியப்ப பிள்ளையின் உதவியுடன் நான் மேற்கொண்ட முயற்சி பலன் தராது போனது என்றவாறு பல நிகழ்வுகள் நடந்தேறின. இருப்பினும், தங்களது கவிதைகளை இணைய இதழ்களில், குழுமங்களில் வெளியிடுவதில் ஓரளவிற்கு நான் வெற்றி பெற்றேன். உங்களது கவிதைகள் ஓடையில் வெளிவந்தன. திரு சகாரா அவர்களின் கவிதைகள் Halwacity.com, வார்ப்பு, தினம் ஒரு கவிதை குழுமம் ஆகியவற்றில் வெளிவந்தன. இன்று நான் உட்கார்ந்து பின்னோக்கி சிந்திக்கும்போது நாம் கடந்து வந்த தூரங்கள்/பாதைகள் தாண்டி நாம் செல்ல வேண்டிய இலக்கு மிகவும் தூரமாகத் தெரிகிறது. இந்தத் தூரத்தை விரைவில் கடக்க வேண்டின் இதழியல் குறித்தான நம் கருத்துகளில் சில மாற்றங்கள் அவசியம் என்றே நினைக்கிறேன். பெரும்பாலும் பணக்காரர்களின் பொழுதுபோக்கு விளையாட்டுப் பொருளாக நமக்கு அறிமுகமான இணையம், தற்போது தனது எல்லைகளை விரித்துக் கொண்டே வந்து இன்று இலக்கியத்தை வெளியிடும்/படிக்கும் ஒரு ஊடகமாகவும் வளர்ந்திருக்கின்றது. எந்தக் கணினியிலும் தமிழைத் தெளிவாக தமிழ் வடிவங்களிலேயே காட்டும் யூனிகோட் என்ற எழுத்துவகைத் தொழில் நுட்பம் அறிமுகமான பின்னால் இது இன்னும் பல்கிப் பெருகிக் கொண்டு வருகின்றது. ஆங்கிலம் போலவே தமிழை நேரடியாகக் கணிணியில் உள்ளீடு செய்யும் கருவிகளை தமிழ் உணர்வுள்ள அறிவியலாளர்கள் / ஆர்வலர்கள் உருவாக்கி யார்வேண்டுமானலும் இலவசமாக பயன்படுத்திக்கொள்ள இணையத்தில் போட்டு வைத்திருக்கிறார்கள். இந்த அறிவியல் முன்னேற்றத்தின் காரணமாக தமிழில் யார் எழுதியதையும் யார் வேண்டுமானாலும் உலகத்தின் எந்த மூலையிலிருந்தும் எந்தத் தடங்கலுமில்லாமல் தமிழிலேயே படிக்கும் வாய்ப்பு ஏற்பட்டிருக்கிறது. இவை ஒருபுறமிருக்க நல்ல சிற்றிதழ்கள் ஒரு குறிப்பிட்ட வாசகர் வட்டத்துக்கு அப்பால் பரவ இயலுவதில்லை. அப்படி ஒரு சிற்றிதழ் இருப்பதே படிக்கத் தயாராக இருக்கும் நிறைய வாசகர்களுக்குத் தெரியாமல் போய்விடுகிறது என்பதும் ஒரு கசப்பான உண்மை. இந்த ஒரு சூழலில் ஒரு சிற்றிதழில் வெளிவரும் நல்ல கருத்துக்கள் எல்லா மக்களையும் போய்ச் சேர வேண்டுமெனில் காகித இதழோடு இணையத்திலும் அதனை வெளிவரச் செய்வது ஒரு நல்ல முயற்சியாக எனக்குத் தோன்றுகிறது. இன்று உலகம் அறிவியலின் பலன்களைப் படிகளாய்ப் பயன்படுத்திக் கொண்டு உயரே சென்று கொண்டிருக்கிறது. இந்த நேரத்தில் காகித இதழ்களில் எழுதிக்கொண்டிருக்கும் சிற்றிதழ் எழுத்தாளர்களுக்கு இணையத்தில் எழுதப்பட்டுக் கொண்டிருக்கும் நல்ல படைப்புகள் போய்ச் சேர்வதற்கும் , சிற்றிதழ்களில் வெளியிடப்படும் நல்ல படைப்புகளை இணைய வாசகர்கள் படிக்கவும் ஏதேனும் ஒரு நல்ல வழி கண்டுபிடிக்க வேண்டும். இரண்டு வகையான ஊடகங்களுக்கும் இடையில் யாரேனும்/எதுவேனும் பாலமாக இருந்து கருத்துப் பரிமாறலுக்கு ஒரு வழி ஏற்படுத்த வேண்டும் என்று நான் நீண்ட நாட்களாக யோசித்துக் கொண்டிருக்கிறேன். எல்லோருக்கும் இணைய இதழ்களைப் படிக்கும் வாய்ப்பு அமைவது கடினமே. புலியூர் போன்ற நகரமாகி வரும் ஊர்களில் வேண்டுமானால் இது சாத்தியமாகலாம். இணையத்தில் எழுதிக் கொண்டிருப்பவர்கள் காகிதத்தில் வந்து கொண்டிருக்கும் சிற்றிதழ்களைப் படிக்கிறார்களா என்பது சந்தேகமே. நம் நாட்டு எல்லைகள் தாண்டி காகித இதழ்களை அஞ்சல் செய்வதும் பொருளாதார ரீதியில் சிற்றிதழ் ஆசிரியர்களுக்குச் சாத்தியமில்லை. (சொந்தப் பணத்தை முதலீடாக இட்டுத்தான் நிறைய சிற்றிதழ்கள் வெளி வருகின்றன என்ற உண்மை அனைவரும் அறிந்த ஒன்றே). எனவே இது குறித்து நான் வெகுநாட்களாக உங்களிடம் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று நினைத்துக் கொண்டிருந்த சில கருத்துக்களை உங்களுக்கு இன்று கடிதமாய் எழுத நேர்ந்தது. எனக்குத் தெரிந்த வரை, புத்தகத்தை அச்சிடுமுன் கணினி வழியாகத் தட்டச்சு செய்துதான் அச்சிடுகிறோம். எனவே ஏற்கனவே கணினியில் உள்ளிடப்பட்ட படைப்புகளை இணையத்தில் உள்ளிடுவதில் அதிக சிரமம் இருக்கப் போவதில்லை. இருப்பினும் , அச்சிடுவதற்காக கணினிக்குள் உள்ளிடும்போது பயன்படுத்தப்படும் எழுத்துரு (Font) என்ன என்பது மிக முக்கியமாகிறது. ஏனெனில் இந்த எழுத்துருவில் உள்ளிடப்பட்ட படைப்புகளை யூனிகோட் எழூத்துக்கு மாற்ற முடியுமா என்ற சிக்கலுக்கு நாம் விடை கண்டு பிடித்தாக வேண்டும். Tscii/Tam/Tab எழுத்துருவாயின் யூனிகோடுக்கு மாற்றத் தேவையான கருவிகள் நமக்குக் கிடைத்துவிடும். இந்த சிக்கலுக்கு நாம் விடை கண்டுபிடிக்க வேண்டுமெனில், நீங்கள் அச்சிடும் அச்சகத்தாரிடம் அவர்கள் பயன்படுத்த வேண்டிய எழுத்துரு பற்றி முதலிலேயே நீங்கள் சொல்லி ஒரு முடிவுக்கு வரவேண்டியிருக்கும். ஒருவேளை எழுத்தின் வடிவ மாற்றம் தவிர்க்க முடியாதது எனில் அதனை ஏற்றுக்கொள்ள நாம் தயாராக இருக்க வேண்டும். இதற்குப்பிறகு, இணையத்தில் நிறைய நிறுவனங்கள் அளித்துவரும் இலவச இணைப்பக்கங்கள் /குழுக்கள் / வலைப்பூக்கள் வழியாக தேர்தெடுத்து சில கட்டுரைகளை தொடர்ச்சியாக வெளியிடலாம். (அனைத்தையும் வெளியிடுவதானாலும் சரியே. இருப்பினும் அப்போது நமக்கு இலவசமாக அளிக்கப்பட்ட குறைந்த இடத்தில் முழு இதழையும் வெளியிடுவதில் சிக்கல் ஏற்பட வாய்ப்பிருக்கிறது.) குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகு, வாசகர்களின் எண்ணிக்கையைப் பொறுத்து /இதழின் வளர்ச்சியைப் பொறுத்து, நமக்கென்று ஒரு இணைய தளத்தையும் விலைக்கு வாங்கி சிற்றிதழைப் பேரிதழாக மாற்றலாம். எனவே காகிதத்தில் இருந்து கொண்டிருக்கும் நமக்கு , கணினிக்கு மாறுவது குறித்து ஒரு கருத்தியல் மாற்றம் வர வேண்டும். இணையத்தின் வழியாகக் கிடைக்ககூடிய வாசகர்களின் கருத்துக்களைக் கையாள அடிக்கடி இணையத்தைத் தொடர்புகொள்ள ஒரு கணினியும், இணைய இணைப்பும் , அதற்காகும் செலவைச் சரிகட்ட ஒரு நிரந்தர பண உதவியும் தேவைப்படும். எனவே இதை பற்றிய ஒரு மனம் திறந்த உரையாடல் நமக்கு அவசியமாகிறது. இப்போது, இதழ் வெளிவருவதில் இருக்கும் அனைத்து படிநிலைகளையும் பட்டியலிட்டோமானால் இது இன்னும் தெளிவாகும்
1. படைப்புகளை சேகரித்தல்
2. வெளியிடுவதற்கான படைப்புகளைத் தேர்ந்தெடுத்தல்
3. கணினியில் உள்ளிடுதல்
4. பிழைகள் திருத்துதல், சரி பார்த்தல்
5. அச்சிடுதல்
6. வாசகர்களுக்கு அனுப்புதல்

இந்த படிநிலைகளில் சில மாற்ற்ங்களைச் செய்தால்
1. படைப்புகளை சேகரித்தல்
2. வெளியிடுவதற்கான படைப்புகளைத் தேர்ந்தெடுத்தல்
3. தேர்தெடுத்த எழுத்துருவில் (font) கணினியில் உள்ளிடுதல்
4. பிழைகள் திருத்துதல், சரி பார்த்தல்
5. a. அச்சிடுதல் b. இணையத்தில் (தேர்ந்தெடுத்த சில படைப்புகளை) உள்ளிடுதல்
6. வாசகர்களுக்கு அனுப்புதல்
இதற்கப்பால் வாசகர்களின் கருத்துக்களை (feed back) கையாள்வதைப்பற்றி நாம் சிந்திக்க வேண்டியிருக்கிறது. இதற்கு எனக்குத் தெரிந் த வரையில் சில எளிய வழிமுறைகள் இருக்கின்றன.
1. இதழுக்கென ஒரு மின்னஞ்சல் முகவரியை வைத்துக்கொண்டு அதன் வழியாகக் கருத்துக்களைப் பெறுதல்
2. வாசகர்களிடமிருந்து கடிதங்கள் வழியாகக் கருத்துக்களைப் பெறுதல்
3. வாசகர்களிடமிருந்து நேரடியாக கருத்துக்களை இதழில் பெறுதல் (யாஹூ குழுமங்களில் இது எளிது. ஆனால் இலவச வலைப்பூ / வலைத்தளங்களில் இது சிறிது கடினம்.) நான் உங்களை அதிகம் குழப்பி விடவில்லை என்று நம்புகிறேன்!! இதனை எளிமையாக்க வேண்டுமெனில் நாம் ஒரு குழுவாகச் செயல்பட்டு நமக்குள் சில கடமைகளைப் பிரித்துக் கொள்ளலாம். இணையத்தில் வெளியிடும் பொறுப்பை நான் ஏற்றுக்கொள்ளத் தயாராக இருக்கிறேன். இதழை அச்சிட்டு முடித்தபிறகு , மின்வடிவிலிருக்கும் இதழை எனக்கு மின்னஞ்சல் அனுப்பினால், அதனை நான் இணையத்தில் வெளியிடத் தயாராயிருக்கிறேன். இதழின் படைப்புகள் மீதான எதிர்வினைகளை / படைப்புகளை அதே மின்னஞ்சலில் பெற்று, அதனை காகிதத்தில் print எடுத்துக் கொள்ளலாம். ஒரு சோதனை முயற்சியாக சென்ற பயணம் புதிது இதழிலிருந்து சில கட்டுரைகளை (நாங்களே ஏழெட்டு நாட்களாய் type செய்து) ஓடையில் வெளியிட்டோம். அவை நல்ல வரவேற்பை பெற்றன என்பது நமக்கு மிக்க ஊக்கத்தை அளிக்கிறது. இது நாம் சில மாற்றங்களுத் தயாராக வேண்டியதன் அவசியத்தையும் நமக்கு உணர்த்துகிறது. சென்றமுறை நாம் சந்தித்தபோது கிராமத்திலிருந்து வெளியேறி நகரமயமாதலுக்குள் உழன்று கொண்டிருக்கும் என்போன்றவர்களின் அனுபவங்களை எழுத வேண்டும் என்று நீங்கள் சொன்னதைப் பற்றியும் நான் யோசித்து வருகிறேன்.
நல்ல படைப்புகள் கவனம் பெற வேண்டும் என்பதில் உங்களோடு எனக்கும் உடன்பாடே. அதற்கு நமது புதிய வழிமுறை வாசலாயிருக்கும் --கைகாட்டி

சனி, செப்டம்பர் 23, 2006

மழை 4 துளி 8

ஒரு கேள்வி -துடிமன்னன்

வலைப்பூ (valaippoo.blogspot.com) –ல் பழைய பக்கங்களைப் புரட்டிப் பார்க்கையில், எதேச்சையாகக் கண்ணில் பட்ட ஒரு விவாதம் பற்றிய என் கருத்துக்களை இங்கு பதிவு செய்யலாம் என்று நினைக்கிறேன். வலைப்பூவில் ஒவ்வொரு வாரமும் ஒருவர் சிறப்பாசிரியராகப் பொறுப்பேற்று தன் கருத்துக்களை வெளியிட்டு வருகின்றனர். அப்படி நவம்பர் 23-29 ல் பொறுப்பேற்ற திரு நவன், Blog-களில் ஆசிரியர்களின் எழுத்து நடையை வைத்து அவர்கள் எந்த ஊர் என்று கண்டு பிடிக்குமாறு விளையாட்டாகக் கேட்க, அதற்கு வந்த பின்னூட்டங்களில் ஆரம்பித்தது ஒரு புதிய விவாதம் !! இலங்கைத் தமிழ் புரியவில்லையென்று ஆரம்பித்த இந்த விவாதம் பின்பு சூடு பிடித்து பின்பு tamil-discussion யாஹூ குழுமத்திலும் இந்த விவாதம் தொடர்ந்தது. இதைப் படிக்க சுட்டி: valaippoo இந்த சுட்டியில் Wednesday, November 26, 2003 லிருந்து படிக்க ஆரம்பிக்கவும். இதன் மிச்ச விவாதம் இங்கு நடக்கிறது tamil_discussion என்னுடைய கருத்து நேரடியாக இந்த விவாதக் கருத்துகளின் எதிர்வினையாக இல்லாதிருப்பினும் இந்த விவாதத்திற்கு ஓரளவிற்குத் தொடர்புடைய கேள்வி எனக்குள் எழுந்ததால் இங்கு அதைப் பற்றி எழுதுகிறேன். நான் இங்கு எழுப்பும் கேள்வியை யாரும் ஏற்கனவே எழுப்பியிருக்கிறார்களா என்று தெரியவில்லை. நான் பத்தாம் வகுப்பு வரை வரலாற்றை ஒரு பாடமாகப் படித்திருக்கிறேன். (State Board of Tamil Nadu-1982-1992) ஆனால் இலங்கையில் வாழும் தமிழர்கள் பற்றி ( குறைந்த பட்சம், இலங்கையில் தமிழர்கள் இருக்கிறார்கள் என்ற வரிகளையாவது) நான் வரலாற்றுப் புத்தகங்களில் படித்ததாகவோ, இல்லை எனது ஆசிரியர்கள் சொன்னதாகவோ நினைவு இல்லை. மூவேந்தர்கள் காலத் தமிழக வரலாற்றைப் பற்றிய பாடப் பகுதிகளில் தமிழக மன்னர்கள் இலங்கை மீது படை எடுத்தார்கள்/ வென்றார்கள் என்று மட்டுமே பாடப் புத்தகத்தில் பார்த்ததாக நினைவு. இந்திய அமைதிப்படை இலங்கை சென்றபோது தினமணியில் வந்த செய்திகளை வைத்துத்தான் இலங்கையில் தமிழர்கள் வாழ்கின்றார்கள் என்பதையும், அவர்கள் சிங்கள இன மேலாதிக்கத்தை எதிர்த்துப் போராடி வருகிறார்கள் என்பதையும் நான் அறிந்து கொண்டேன். பாடப்புத்தகத்தை மட்டுமே படிக்கும் பழக்கமுடைய 90% மாணவர்களுக்கு இலங்கை(த் தமிழர்களை)யைப் பற்றி அதிகம் தெரிந்திருக்க வாய்ப்பில்லை என்றே எனக்குத் தோன்றுகிறது. (இப்போது கிராமங்கள் வரைக்கும் தொலைக்காட்சி பரவிய பின்பு ஓரளவிற்கு மாறுதல் ஏற்பட்டிருக்கக் கூடும்) என்னுடைய கேள்வி எல்லாம் தமிழ்நாட்டின் பாட நூல்களில் ஏன் இலங்கைத் தமிழர்களைப் பற்றி எழுதப்படவில்லை என்பதே. இலங்கை எழுத்தும் தமிழ்ப் பாட நூல்களில் இடம் பெறவில்லை என்பதும் கருத்தில் கொள்ளத் தக்கது. இப்போது ஏதேனும் பாடநூல்களில் மாற்றியிருக்கிறார்களா என்று தெரியவில்லை. (ஆனால் பிரிட்டனிடமிருந்து விடுதலை பெற அமெரிக்கா நடத்திய போராட்டங்களைப் பற்றியெல்லாம் தமிழ் நாட்டுப் பள்ளிகளின் வரலாற்றுப் பாடப் புத்தகங்களில் காணக் கிடைக்கிறது. ) இந்த மாதிரி தமிழகத்து பள்ளிப் பாடப் புத்தகங்களில் இலங்கைத் தமிழர்களின் இருப்பினைப் பற்றி (existence of Sri Lankan Tamils) இருட்டடிப்பு ஏன் என்று யாருக்கேனும் தெரிந்தால் எனக்குத் தெரிவிக்கவும். அந்த மாதிரி இருட்டடிப்பு இல்லை, எனக்குத்தான் பார்வைக் கோளாறு என்று யாரேனும் நிறுவினால் நான் இன்னும் மகிழ்ச்சி அடைவேன் --துடிமன்னன்

மழை 4 துளி 7

கனவு (மட்டுமே) காணுங்கள்

ம.ஜெயப்பிரகாஷ வேல் (பயணம் புதிது ஜன-பிப் 2004 )

"வேலையே அதன் விருது. இந்தியச் சூழலில் அறிவியல் துறைக்கு முற்றிலும் பொருந்தும். ஏனெனில் இங்கு வேறெந்த வகையிலும் எந்தவொரு அங்கீகாரமும் கிடைக்கப் போவதில்லை " -ஹேது.சி.ஷேத் (டிசம்பர்-1999 -கரன்ட் சயன்ஸ் இதழ் ) "இப்போது மாணவர்களிடயே விஞ்ஞானக் கல்வி நாட்டம் குறைந்துள்ளது. இன்னும் சில ஆண்டுகளில் ஆராய்ச்சி நிலையங்களில் விஞ்ஞானப் பட்டதாரிகளுக்குத் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உள்ளது. 50 ஆண்டுகளுக்கு முன்னால் விஞ்ஞானக் கல்வி படிக்க மாணவர்கள் அதிக ஆர்வம் காட்டினர். திறமையான மாணவர்கள் விஞ்ஞானக் கல்வியை ஏன் விரும்புவதில்லை என்று ஆய்வு நடத்த வேண்டும். விஞ்ஞானக் கல்வி படித்தவர்களுக்கு வேலை வாய்ப்பை அதிகரிக்க வேண்டும். விஞ்ஞானத்தில் முனைவர் பட்டம்(Ph.D) பெற்ற இந்தியர்களை வெளிநாட்டு நிறுவனங்கள் கவரத் தொடங்கி உள்ளன. அதைத் தடுத்து நிறுத்த வேண்டும் " - பிரதமர் அ.பி.வாஜ்பாய் (புது தில்லியில் ஸ்வரூப் பட்நாயக் விருது வழங்கிப் பேசுகையில்; புதுதில்லி. ஜூலை-3-2003; தினத்தந்தி) கல்வி இந்தியா போன்ற வளரும் நாடுகளில் அறிவியல் முன்னேற்றம் ஒரே நாளில் வந்துவிடாது. அலாவுதீனின் அற்புத விளக்குக்கு நாம் ஆசைப்படவும் கூடாது. ஒரு வளரும் நாடு வளர்ந்த நாடாவதற்குத் தற்சார்புடைய அறிவியல் முன்னேற்றம் பெரும் காரணியாக விளங்குவதால், இந்தியாவின் அறிவியல் முன்னேற்றம் முக்கியமான இடத்தைப் பெறுகிறது. அத்தகைய தற்சார்புடைய அறிவியல் முன்னேற்றத்திற்காக அடிப்படையில் இருந்தே வலிமையாக ஆரம்பிக்க வேண்டியதாக உள்ளது. நமது கல்வி முறையில் அறிவியலைக் கற்கும், கற்பிக்கும் முறைகளில் பெரும் மாறுதல்கள் தேவை. சுண்ணாம்பு நீரை பால்போல மாற்றும் வாயு கார்பன் டை ஆக்சைடு என்பதை அசோகர் மரம் நட ஆரம்பித்த காலத்திலிருந்தே கற்பித்து வருகிறார்கள். மாணவர்களும் ஐந்து மதிப்பெண்களுக்காக அதை மனப்பாடம் செய்து எழுதுகிறார்கள். கல்வித்துறையில் புதிய அறிவியலை, தற்கால அறிவியலைப் புகுத்த வேண்டும். பாடத்திட்டங்கள் நிகழ்கால அறிவியலைப் பிரதிபலிப்பவையாக இருக்க வேண்டும். ஏனெனில் முன்னேற்றம் என்பது நன்கு தயார்படுத்தப்பட்ட மனங்களின் வலிமையான கரங்களிடம் உள்ளது. கற்பிப்பவர்களும், புத்துப்புது அறிவியல் முன்னேற்றங்களையும் மாறுபட்ட கருத்துக்களையும் மாணவர்களுக்கு அறிமுகம் செய்து ஆர்வமூட்டுபவர்களாக இருக்க வேண்டும். எல்லாவற்றிற்கும் மேலாக சம்பளத்திற்காகக் கற்பிப்பது, மதிப்பெண்களுக்காகப் படிப்பது என்ற மனோபாவம் மாற வேண்டும். அங்கீகாரம் அறிவியலின்பால் அதீத ஆர்வம் மட்டும் நல்ல முன்னேற்றத்தைத் தந்துவிடாது. அதனை ஏற்றுக் கொள்கிற ஆரோக்கியமான சூழலும் அதற்கேற்ற அங்கீகாரமும் கிடைக்கிறபோதுதான் அதன் உண்மைப் பலனை அடைய முடியும். மக்களுக்கும் அறிவியலாளர்களுக்கும் இடையே உள்ள இடைவெளி குறைய வேண்டும். காலையில் பல்துலக்கி இரவில் இமைமூடித் தூங்கும் அளவுக்கு அவர்களும் மனிதர்கள்தான் என்பதை மக்கள் உணர வேண்டும். அறிவியல் மந்திரம் போன்றதல்ல; மக்களுக்கானது என்பதை அறிவியலாளர்களும் தெளிவுபடுத்த வேண்டும். செய்தி ஊடகங்களின் பலத்தை அறிவியல் துறையினர் நன்கு பயன்படுத்திக் கொள்ள வேண்டும். அவற்றின் அறிவியல் முன்னேற்றங்களும் புதிய தொழில் நுட்பங்களும் எல்லோரையும் சென்றடையும் வண்ணம் செய்ய வேண்டும். அரசின் விரிவாக்க மையங்கள் இவற்றின் நேரடிப் பயன்பாட்டிற்குப் பாதையாக இருக்க வேண்டும். அரசும் அறிவியல் உலகமும் நெருங்கி வரவேண்டும். ஒருங்கிணைந்து செயல்படவேண்டும். நிதி ஒதுக்குவது - ஆய்வு முடிவுகள் பெறுவது என்ற நேர்கோட்டில் கடிவாளமிட்ட குதிரையாய்ப் பயணம் செய்வது பலன் தராது. கொள்கையளவிலான புதிய முடிவுகளைக் கூட்டாகச் சேர்ந்து நிர்மாணம் செய்து அதை நோக்கிச் செயல்பட வேண்டும். நிதியுதவி பெறுவது, விருதுகள் அளிப்பது பரிசுகள் வழங்குவது போன்றவற்றில் தனிநபர் செல்வாக்கு தவிர்க்கப்பட வேண்டும். உண்மையான உழைப்பு அங்கீகரிக்கப்படும்போதுதான் அது தன் உண்மையான பலனை அடைகிறது. எனவே விருதுகளும் கவுரவங்களும் முறையானதாக இருக்க வேண்டும். நிதியுதவி நமது நாட்டில் நடத்தப்படும் பெரும்பாலான ஆய்வுகளுக்கு அரசே நிதியுதவி அளிக்கிறது. நாட்டின் மொத்த வளத்தையும் இதிலேயே முடக்க முடியாது. நிதியுதவிக்கான அரசின் கொள்கைகள், ஆய்வு நாட்டம் ஆகியன உள்நாட்டு தொழில் முனைவோர்களிடம் வரவேற்பைப் பெறுவதாக அமைதல் அவசியம். அரசு, நம் இந்தியச் சூழலுக்கு உகந்ததாக, நேரடிப் பயன்பாட்டை நல்குவதாக அமையும் ஆய்வுகளை ஊக்குவிக்க வேண்டும். எந்தவொரு அறிவியல் முன்னேற்றமோ புதிய தொழில் நுட்பமோ தொழிற்புலத் தேவைகளை நிறைவு செய்வதாக அமைதல் நலம் பயக்கும். எனவே ஆய்வுகளுக்கான நிதியுதவிகளில் உள்நாட்டுத் தொழில் முனைவோர்களுடைய பங்களிப்பும் தேவையாக இருக்கிறது. தொழில் முனைவோர்களிடம் கட்சி வளர்ச்சி நிதி வசூலிப்பதை விடவும் அவர்களை ஆய்வுப் பங்களிப்புக்கு உதவச் செய்வது நாட்டின் முன்னேற்றத்தைத் துரிதப்படுத்தும் என்பதை அரசை நிர்வாகம் செய்பவர்கள் உணர வேண்டும். வாழ்வியல் மேம்பாடு அறிவியல் புலத்தில் ஆய்வு மேற்கொள்ளுபவர்களின் வாழ்வியல் முன்னேற்றத்தில் கவனம் நிறைய செலுத்த வேண்டும். நிறைய புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்குவதும், குறைந்தபட்ச வயதுவரம்பைத் தளர்த்துவதும் மற்றும் உலகளாவிய வாய்ப்புகளை ஏற்படுத்தித் தருவதும் புதிய மாற்றங்களை ஏற்படுத்தும். ஆய்வு மேற்கொள்ள நடத்தப்படும் தகுதித் தேர்வுகளில் வெற்றிபெறும் மாணவர்களுக்கு வேலை உறுதி செய்யப்பட்டால் நிறைய மாணவர்கள் வெளியேறுவது குறையும். பதிப்புத்தரம் இந்திய ஆய்விதழ்களின் தரம் உயர்த்தப்பட வேண்டும். நமது அறிவியலாளர்களும் முக்கியமான ஆய்வு முடிவுகளை உள்நாட்டு ஆய்விதழ்களில் வெளியிட முன்வர வேண்டும். தன் வாழ்நாளில் சர்.சி.வி ராமன் சுமார் 15 கட்டுரைகளை மட்டுமே வெளிநாட்டு ஆய்விதழ்களில் வெளியிட்டுள்ளார். மீதமுள்ள 200-க்கும் மேற்பட்ட ஆய்வுக்கட்டுரைகள் உள்நாட்டு இதழ்களில் வெளியிடப்பட்டவை. பதிவு செய்யப்பட்ட ஆய்வுக்கட்டுரைகளை, புதிய தொலைநுட்ப அறிவுகளைப் பயன்படுத்த , எளிதானவைகளாக மாற்ற , உலகளாவிய ஒருங்கிணைப்பு தேவை. காப்புரிமை இந்த இடத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது. ஆய்வுக்குரிய செய்முறைகள் சிலவும், குறிப்பிட்ட சில பொருட்களும் காப்புரிமை பெறப்பட்டு அவற்றின் தடையற்ற உபயோகம் தடுக்கப்பட்டுள்ளது. (இது குறித்த விரிவானதொரு கட்டுரை டிசம்பர் 2003 'உயிர்மை' இதழில் வெளிவந்துள்ளது.) ஆய்வுகளின் முக்கியத்துவம் மேற்கொள்ளப்படும் ஆய்வுகள் நம் நாட்டுக்கு பயனளிப்பவையாக இருப்பது அவசியம். அணுகுண்டுகள் சொந்தமாக தயாரித்து வெடித்தும் விட்டோ ம். அதனால் பெரிதாக ஒன்றும் ஆகிவிடவில்லை. பதிலுக்கு பாகிஸ்தானை அணுகுண்டு தயாரிக்கத் தூண்டியுள்ளோம். நமது நாட்டுக்கு என்ன தேவையோ, நம்மால் எதை நன்றாகச் செய்ய முடியுமோ அதை நமக்கேயுரிய தனித்துவத்துடன் செய்தால் அறிவியல் உலகில் மிளிரலாம். அடிப்படையில் இந்தியா ஒரு விவசாய நாடு. செயற்கைக்கோள் ஏவுவதை விடவும், அடுத்த நாட்டுக்குக் கார் செய்து அனுப்புவதை விடவும் நம்மால் விவசாயத்துறையில் நிறையச் சாதிக்க முடியும். பேராசிரியர் ஜோஸ் சோல்டம்பர்க் (பிரேசில்) அவர்களின் "நம்மைப் போன்ற வளரும் நாடுகளில் இருக்கும் அறிவியல் முன்னவர்கள் அமெரிக்கா போன்ற வளர்ந்த நாடுகளின் ஆய்வு மாதிரியைப் பின்பற்றுவதை விடவும், நமது சொந்த, உள்நாட்டுச் சூழலுக்கு தகவமைத்துக் கொண்டு தொழில்நுட்ப முன்னேற்றங்களை ஏற்படுத்த வேண்டும். அதன் மூலம் கல்வித்துறை, அரசு மற்றும் தொழில்துறைக்கான வளர்ச்சிகளை உருவாக்க வேண்டும். முன்னேற்றத்தின் முதல்படி இதுதான் " என்ற கருத்து கவனிக்கத்தக்கது, இவரின் கருத்துக்கு விரிவான ஆதாரம் உதாரணமாக உள்ளது. பிரேசில் அடிப்படையில் விவசாய நாடுதான். முக்கியமாய் கரும்பு. அவர்கள் கரும்பிலிருந்து குறைந்த செலவில் ஆல்கஹால் தயாரிக்கும் தொழில்நுட்பத்தையும், அதை பெட்ரோலிய எரிபொருட்களுக்கு மாற்றாக உபயோகிக்கும் முறைகளையும் உருவாக்கினர். தற்போது அந்த நாடு தன் எரிபொருள் தேவையில் சரிபாதிக்கும் மேலாக ஆல்கஹாலைக் கொண்டு பூர்த்தி செய்து கொள்கிறது. தற்போது வளர்ந்த நாடுகளில் கூட வெற்றிகரமாக இல்லாத அந்த மாற்றுவகை தொழில்நுட்பத்தை முற்றிலும் உள்நாட்டு விஞ்ஞானிகளால் உள்நாட்டிலேயே சாத்தியமாகக் காரணம் அவர்களின் பாரம்பரிய வளம்/பலம் புரிந்துகொள்ளப்பட்டு சரியான முறையில் அணுகப்பட்டதே ஆகும். ஆய்வுகளில் அடிப்படையான சுகாதாரப் பிரச்சினைகளுக்கும், ஆதாரமான விவசாயத்திற்கும் முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும். செல்போனில் எதிர்க்குரல் தெளிவாகக் கேட்பதை விடவும் நிமிடத்துக்கு நான்கு பேரைக் கொல்லும் காசநோயைக் குணப்படுத்துவது அவசியம், அவசரம்; அமெரிக்காவில் சிலிக்கன் பள்ளத்தாக்குகளில் அதிகம் விழுந்து கிடப்பது இந்தியர்கள்தான் என்பதைவிடவும் மழை பொய்த்து, கருகும் பயிர்களும், வெடிக்கும் நிலங்களும் காக்கும் உழவர்களின் நிலை உணர்ந்து நோக்கத் தக்கது. உள்கட்டமைப்பு பல்கலைக்கழகங்கள் கல்விக்கூடங்கள் ஆய்வு நிறுவனங்கள் முதலியன 3*, 5* முதலான பலவகைக் குறியீடுகளால் தரப்படுத்தப்பட்டுள்ளன. இந்தத் தரவரிசைகளின் நோக்கம் தலைகீழாகி விட்டது. தரவரிசையில் மேலே உள்ள நிறுவனக்களுக்கு அரசு அதிக அளவில் நிதியுதவி அளிக்கிறது. கீழ்நிலையில் உள்ள நிறுவனங்களின் கண்ணில் சுண்ணாம்பு வைக்கிறது. மாறாக, கீழ்நிலையில் உள்ள நிறுவனங்கள் அதிக நிதியுதவியுடன் தரத்தில் மேம்பட உதவ வேண்டும். மத்திய அறிவியல் தொழில்நுட்பத் துறை(DST) FIST போன்ற நடவடிக்கைகளால் ஆய்வு நிறுவனங்களின் குறிப்பிட்ட துறைகளை மேம்படுத்தி வருகிறது. இவற்றை வளராத நிறுவனங்களின் துறைக்கும் புகுத்த வேண்டும். சில அவசியமான, விலையுயர்ந்த கருவிகளைப் பயன்படுத்தவும், சிக்கலான செய்முறைகளைச் செய்யவும் மத்திய அரசு, மண்டலம் வாரியாக RSI (Regional Sophisticated Instruments Counter) எனப்படும் அமைப்புகளால் உதவி வருகிறது. இவற்றை மேலும் விரிவுபடுத்தி நிறைய ஆய்வு நிறுவனங்கள் பயன்பெற ஏதுசெய்ய வேண்டும். அரசு மற்றும் தனியார் ஆய்வு மையங்களிடையே கருத்துப் பரிமாற்றம் பரஸ்பர ஒத்துழைப்பு அமைய வேண்டும். அமைப்பு அரசு நிறுவனங்களின் அதிகார அடுக்குகள் மறு நிர்மாணம் செய்யப்பட வேண்டும். நிதி வழங்குவது, பயன்பாடு முதலியன எளிமையாக்கப்பட வேண்டும். ஆய்வு மாணவர்களின் நலன் கவனத்தில் கொள்ளப்பட வேண்டும். ஆய்வுக்களத்தில் நேரடியாக நின்று செய்பவர்கள் மாணவர்கள்தான். அவர்களுக்குச் சம்பளம், பட்டம் முதலியன முறையாக வழங்கப்படுவது அவசியம். நிதியாதாரப் பயன்பாடுகளை எளிதாக்கும் அதே வேளையில் அவற்றின் முறையான உபயோகம் குறித்த சரியான கண்காணிப்பும் தேவை. ஆய்வுப்பணிகளின் இடைக்கால முன்னேற்றம், முடிவுகளின் நம்பகத்தன்மை, அவற்றின் பயன்பாடு முதலியன கவனமாக , கடுமையாகப் பரிசீலிக்கப்பட வேண்டும். பெரும்பாலான அரசுத்துறைகளைப் போலவே அறிவியலிலும் அமைப்புக் குறைபாட்டால்தான் அதிக பாதிப்பு ஏற்படுகிறது. தொடர்ச்சியற்ற நிதி ஒதுக்கீடு மற்றும் நிர்வாகக் குளறுபடிகளால் திரு மேனன் தலைமையில் கோலார் தங்கவயலில் நடத்தப்பட்ட முக்கியத்துவம் வாய்ந்த ஆய்வுகள் பாதியில் நிறுத்தப்பட்டன. அது சம்மந்தமான முழுமையான ஆய்வுகளை மேற்கொண்ட ஜப்பான் விஞ்ஞானிகள் அதற்காக நோபல் பரிசும் வென்றனர். பசுமைப் புரட்சி காலங்களில் உரம், பூச்சிமருந்து போன்றவை சரியான முறையில் விநியோகிக்கப்படாததும் அறிவியல் பூர்வமான கருத்துக்கள் சாதாரண மக்களைச் சென்றடையாமல் போனதும் நிர்வாகச் சீர்கேடுகளின் சாதனையே. தமிழக அரசின், 'மகளிருக்கான உயரிய தொழில் நுட்பப் பூங்கா' அறிவிக்கப்பட்டு ஆண்டுகள் பல ஆகியும் முழுப்பயன்பாட்டிற்கு இன்னும் வரவில்லை. உலகில் வேறெங்கும் உள்நிறுவனங்களோ கிளைகளோ இல்லாத உலக வங்கி சென்னையில் அலுவலகம் துவக்க உதவியதில் இருந்து - வாடகைக் கட்டிடத்தில் வாடியவர்களுக்குச் சொந்தக் கட்டிடம் கட்ட நிலம் ஒதுக்கியது வரையில் எல்லாம் துரிதமாக நடக்கின்றன. இந்திய மாணவர்கள் வெளிநாட்டுக்குப் போய்விடுவது பற்றி இங்கே கவலைப்படும் பிரதமர் அமெரிக்காவில் NRI-க்களின் முதலீடுகளுக்கான விருந்தில் கலந்து கொள்கிறார். எல்லா வளமும் உள்ளது. இயற்கை வளம், மக்கள் வளம், அறிவு வளம் என எதிலும் குறைவில்லை. முன்னேற்றத்துக்கான உண்மையான நோக்கமும், சரியான உழைப்பும் கைகோர்க்கும்போது அறிவியல் உயரும். நாடும் நிமிரும்.

மழை 4 துளி 6

கடிதம் - வே.பிச்சைமுத்து
அன்பு மகள் விடுதலைவேனிலுக்கு, அப்பா எழுதுவது.
ஒரு வீட்டிற்குள் இருந்துகொண்டே கடிதம் எழுதும் நிலைக்கு உள்ளாக்கிவிட்டாய். எட்டுவயதே ஆன உனக்கு இக்கடித உள்ளடக்கம் எட்டாது எனினும் எழுதவேண்டிய நிலையில் உள்ளேன். உனக்கு எப்போது புரிகிறதோ அப்போதும் இதுவே எனது விடை. தொடர்ந்து வாசி. 'எனக்கு ஆப்பி பர்த் டே எப்பப்பா?' 'எனக்கு ஆப்பி பர்த் டே எப்பப்பா?' என்ற உனது நச்சரிப்புத் தாங்க முடியாமலே இக்கடிதத்தை எழுதுகிறேன். தமிழ்வழிக்கல்வி தரும் பள்ளியில் சேர்த்தும் 'ஆப்பி பர்த் டே' ஆங்கிலம் உன்னை விட்டுவைக்கவில்லை. என் செய்வது? நீ பள்ளியில் கற்றுக் கொள்வதைவிட வெளியில் - வீதிகளில் - சாலைகளில் - வீட்டில் - தொலைக்காட்சியில் - திரைப்படங்களில் கற்றுக் கொள்வது ஏராளம்! அதன் வெளிப்பாடே 'ஆப்பி பர்த் டே'. ஆதிக்க ஆங்கில மொழிக்கலப்பு நம் அன்னைத் தமிழைக் கொல்லுகிறதென்ற கவலை ஒருபுறமெனினும், அதைவிட வேறொரு நெருடல் என்னை அதிகம் வாட்டுகிறது. பிறந்தநாள் கொண்டாடுவதில் உனக்குள்ள மிகை ஆர்வம் - உணர்வே எனக்குள்ள அந்த நெருடல். ஒன்றாம் வகுப்பு, இரண்டாம் வகுப்புகளில் நீ இவ்வாறு நச்சரிக்கும்போது, கொஞ்சம் இனிப்புகளை வாங்கித் தந்தேன். நீயும் உன் வகுப்புத் தோழர்களுக்கெல்லாம் கொடுத்து மகிழ்ந்தாய். இந்த ஆண்டும் வாங்கித் தருவேன். 50லிருந்து 100 ரூபாய்க்குள் வெற்றுச் செலவு என்றபோதும் , உனக்குச் சிலவற்றைத் தற்போதைக்குச் சொல்லிப் புரியவைக்க இயலாது என்பதால் இதை நான் அனுமதித்தேன். ஆனால், உனது இந்தப் பழக்கம் பெரியவளாகும்போதும் பெரிய கேக் வாங்கி வைத்து, அலங்காரம் செய்து, நண்பர்கள் சுற்றத்தாரை அழைத்து, 'ஆப்பி பர்த் டே' பாட்டுப் பாடி, ஒருத்தர் வாயில் ஒருத்தர் ஊட்டும் அளவிற்கு நீடிக்குமோ என்றுதான் அஞ்சுகிறேன். ஏன் எதற்கு இந்தப் பிறந்தநாள் விழாக் கொண்டாட்டம்? இந்த மண்ணில் பிறந்து விட்டதாலேயே ஆண்டுதோறும் அந்தநாளைக் கொண்டாடித்தான் ஆக வேண்டுமா? எப்படி உன் மனதில் இந்த எண்ணம் வந்தது? உனது பள்ளியில் யாராவது மிட்டாய் கொடுத்து தனது பிறந்த நாளை அறிமுகப்படுத்தியிருக்கலாம். அல்லது திரைப்படத்திலோ, தொலைக்காட்சித் தொடரிலோ இக்காட்சி கண்டு நீ மனதிற்குள் உள்வாங்கியிருக்கலாம். நிச்சயமாக நானோ உன் அம்மாவோ பிறந்தநாள் கொண்டாடுவது குறித்து உனக்கு உணர்வூட்டவில்லை. அதில் எங்களுக்கு அக்கறையும் இல்லை. எதிர்காலத் தேவைகள் குறித்து உன் பிறந்தநாளைக் குறித்து வைத்ததாலேயே உனக்கு அந்த நாளைச் சொல்ல வேண்டியிருக்கிறது. உனக்குத் தெரியுமா? இந்தியாவில் வசிக்கிற மக்களில் பலகோடிப் பேருக்கு தங்களது பிறந்த தேதியே தெரியாது. உண்மையான பிறந்த நாள் தெரியாது. அப்படியானால் பல்வேறு சான்றிதழ்களில் நான் குறித்திருக்கிற பிறந்த நாள்? அது தொடக்கப் பள்ளியில் என்னைச் சேர்க்கும்போது, தலைக்குமேல் வலது கையை வைத்து இடது காதைத் தொடச் சொல்லி, எட்டுவதை வைத்து பள்ளியில் சேர்க்க வசதியாக ஆசிரியர் குறித்துக் கொடுத்த சூன் மாதத்தில் ஒரு நாளே! (விசாரித்துப் பார்த்ததில் தமிழகத்தில் பல்லாயிரம் பேருக்கு அப்படித்தானாம்!) என் அப்பா எழுதி வைக்கவில்லையா? அல்லது எழுதி வைத்தது 77-ஆம் ஆண்டு வெள்ளத்தில் போய் விட்டதா? தெரியாது. பதினோராம் வகுப்பு (பழைய எஸ்.எஸ்.எல்.சி ) தேர்ச்சி பெறும் வரை பிறந்தநாள் ஒன்று இருப்பது குறித்த உணர்வுகூட எனக்கு - என்னைப் போன்ற பலருக்குக் கிடையாது. உன்னைச் சுற்றி என்ன சூழல் நிலவுகிறது தெரியுமா? இந்தியாவில் அன்றாடங் காய்ச்சிகள், விவசாயக் கூலிகள், உதிரித் தொழிலாளர்கள், குழந்தைத் தொழிலாளர்கள் உட்பட உடல் உழைப்பாளர்கள்... என 60% பேர் உள்ளனர். அதிலும் பெரும்பான்மையோர் வர்க்க - வருணப் படிநிலைக் கோபுரத்தின் அடியில் மிதிபடுகிற தலித் மக்களே! கல்லூரிக் காலங்களுக்குப் பிறகு சில ஆண்டுகள் கிராமங்களைப் படிக்கத் தொடங்கினேன். பிரம்மாவின் காலில் பிறந்த நான், உண்மையான 'மனிதர்களுக்குப்' பிறந்த (பெரியார் வாய்க்குச் சர்க்கரை!) மக்களோடு உண்டும் உறங்கியும் வழ்ந்தும் வந்தேன். பொருளியல் அடிப்படையில் என் தந்தையின் குடும்பத்திற்கும் அவர்கள் வாழ்நிலைக்கும் பெரிய வேறுபாடு இல்லை. ஆனால், சாதியக் கருத்தியல்தான் தலை(முறை)க்குத் தலை(முறை) பிறப்பெடுத்துக் கொண்டு வந்தது. தன்னளவில் என் தந்தை ஓரளவு சாதியத்தைத் தாண்டிய சிந்தனை உடையவராக இருந்தார். நான் அடுத்த அடி எ(கொ)டுத்து வைத்தேன். அதன் விளைவுதான் சூத்திரசாதி அப்பாவுக்கும், சேவைச் சாதி அம்மாவுக்கும் பிறந்த மனுஷியாக நீ! உன் காலத்தில் சாதியத்தை முற்றிலுமாக அழித்தொழிப்பதற்கான இயக்கங்களில் உன்னை முழுவதுமாய் இணைத்துக் கொள்வாய் என்று நம்புகிறேன். சரி, என் ஊர்சுற்றிப் புராணத்திற்கு வருவோம். சுக்காம்பட்டி, வெள்ளணம்பட்டி, அரியபித்தன்பட்டி, நாகம்பட்டி, கருக்காம்பட்டி, வே.புதுக்கோட்டை, பூதிப்புரம்... இப்படி வேடசந்தூரைச் சுற்றியுள்ள கிராமங்களில் மட்டுமல்ல, திண்டுக்கல் மாவட்டத்தின் பெரும்பான்மை கிராமங்களில் சுற்றியிருக்கிறேன். அவ்வப்போது - ஏன் சமீபத்தில்கூட தஞ்சை, கும்பகோணம், மயிலாடுதுறை, சீர்காழியைச் சுற்றியுள்ள கிராமங்களுக்குப் பயணம் செய்கிற வாய்ப்பும் பெற்றேன். இந்தியாவின் கிராமங்கள் ஒவ்வொன்றும் இரண்டிரண்டு கிராமங்களாக இருக்கின்றன என்று டாக்டர் அம்பேத்கர் சொன்னது இன்றும் தொடர்கிறது! இரண்டா(ந்தர)வது கிராமங்களில் வசிக்கும் மக்களை 'வருணிக்க' வார்த்தைகளே இல்லை. கவிழ்ந்த முகங்கள்! நிமிராத நெஞ்சுக்குழிகள்! இளமையிலேயே சுருங்கிய தோல்கள்! எண்ணெய் காணாத செம்பட்டை முடியுடன் பரட்டைத்தலை! வாழ்க்கையிழந்த ஏக்கப் பெருமூச்சு! வயசுக்கு மீறி உழைத்ததால் வளைந்த முதுகுகள், வீதிக்கு ஒரே அடிகுழாய் - நீர் குடிக்க! துவைக்க! 'ஆம்பிளக கண்படாம' அடி குழாய் அருகில் முள்வேலியில் சேலைமறைப்பில் பெண்களின் குளியல்! தாத்தா முதல் பேரன்வரை தங்க 'வசதியாக' ஒரே அறைகொண்ட வீ(கூ)டுகள்! மழையற்ற காலங்களில் குடிசைக்கு வெளியே அடுப்பு. அதில் இவர்கள் வயிறுபோலவே எரியும் நெருப்பு! பெரும்பாலும் இருண்ட குடிசைகள்! சிறுபான்மை மங்கலாய்க் கொஞ்சம் கோழி முட்டை மின்விளக்குகள்! இரண்டுக்கு ஒதுங்கவே இருட்டு எப்ப வரும் அல்லது வந்த இருட்டு சீக்கிரம் விடிந்து விடக் கூடாதே என்ற பரபரப்பு! சுடுகாட்டுக்குப் பாதை கேட்ட தகறாரில் அனாதையாய்க் கிடக்கும் பிணங்கள். இப்படி அடுக்கிக் கொண்டே போகலாம்.... உன்னைப்போல் குழந்தைகள் நிலை...? ஏதாவது பிரச்சாரத்திற்கு ஆட்டோ வில் ஒலிபெருக்கியைக் கட்டிக்கொண்டு அக்கிராமங்களுக்குள் நுழைந்தால் ஓடிவந்து சூழ்ந்துகொண்டு வேடிக்கை பார்க்கும் சிறுவர் சிறுமியர் கூட்டம்! உனக்கு இந்த எட்டு வயதில அல்ல - 4 வயதாகும்போதே உடையின்றி குளியலறையிலிருந்து வீட்டுக்குள் நுழைந்தவுடன் அவசர அவசரமாய்த் துண்டை எடுத்து இடுப்பில் சுற்றிக் கொள்வாய். அவ்வளவு மான உணர்ச்சி உனக்கு! மனித இனத்திற்கு இருக்க வேண்டிய நாகரிக உணர்ச்சி! ஆனால், அந்தச் சிறுவர் சிறுமியர் கூட்டத்திலோ மூன்றுமுதல் 12 வயதுவரையுள்ள குழந்தைகளில் முக்கால்வாசிப் பேருக்கு உடையில்லை - ஜட்டியில்லை - பாவாடையில்லை. சிலர் துணியென்றும், சட்டையென்றும் உடலில் ஏதோ சுற்றியிருக்கின்றனர். நீ வெட்கப்பட்டுச் சிரிக்கிற 'அழகி'ப் படத்தின் காட்சியாய் முக்கியமாக மூடவேண்டிய இடங்களில் எல்லாம் துணி கிழிந்து தொங்கும். ஆடையில்லாமல் திரிவதைவிட 'நாம் இப்படி இருக்கிறோம்' என்ற உணர்வே இல்லாமல் அவர்கள் இருப்பதே மிக வேதனை! 'இதுவே நம் இயல்பு' என்கிற அளவிற்கு அவர்கள் உணர்வு மரத்துப் போயிருக்கிறது. உன்னை அடித்து விரட்டினால்கூட வீதிப்பக்கம் ஆடையின்றி வரக்கூச்சப்படுவாய் - அழுது கொண்டு ஓடி மறைவாய்! ஆனால், யாரும் யாரையும் கேலி கிண்டல் செய்யாதபடிக்கு அந்தக் குழந்தைகள் இயல்பாய் வீதியில் கூடுகின்றன; சுற்றுகின்றன; விளையாடுகின்றன. அவர்களுக்கு மான உணர்ச்சி இல்லை என்பது பொருளல்ல. உண்மையில் எத்தனை வலியுறுத்தினாலும் கிடைக்காத - வாங்கித்தர இயலாத பெற்றோரின் சூழலில் - வாழ்க்கைப் பின்புலத்தில் உணர்வு மட்டத்தில் மட்டும் 'மான உணர்ச்சி'யைப் பாதுகாத்து வைக்க முடியுமா? எனவே, அவர்களுக்கு 'மான உணர்ச்சி' பற்றிய அளவுகோல் மாறுகிறது. அவர்களில் சிலர் பள்ளிக்கும் போகிறார்கள். பையில் புத்தகங்கள் இருக்குமா என்பது ஐயமே. ஆனால், மதிய உணவுக்கான தட்டு நிச்சயம் இருக்கும். ஒருநேர உணவாவது கிடைக்கிறதே என்ற எதிர்பார்ப்புத்தான்! போகிற போக்கைப் பார்த்தால் ஆட்சியாளர்கள் எப்போது அதற்கும் ஏதாவது காரணம் சொல்லி வேட்டு வைப்பார்களோ தெரியாது. அவர்களின் பொழுது போக்கு? அந்தக் கிராமத்தில் ஒருவர், இருவர் வீட்டில் இருக்கும் தொலைக்காட்சிப் பெட்டியைச் சுற்றி அனைவரும் நெருக்கியபடி, அல்லது பழுதடைந்த பஞ்சாயத்துத் தொலைக்காட்சிப் பெட்டிக்குமுன்! 'மோசமான நிகழ்ச்சிகளை - உணர்வு மழுங்கச் செய்யும் காட்சிகளைக் காணாமல் -மனதில் அழுக்குப்படாமல் அவர்கள் வாழ்வது நல்லதுதானே?' என்று சிலர் கருத்துரைக்கலாம். ஆனால் விசயம் அதுவல்ல. எந்தவொரு அறிவியல் கண்டுபிடிப்பின் பயன்பாடும் அனைத்து மக்களுக்கும் சென்று சேர வேண்டும் என்பதே சரியான ஜனநாயகத்தின் வெளிப்பாடாக இருக்க முடியும். பல குடிசைகளில் வானொலிக்கே வழியில்லை. இந்த இலட்சணத்தில்தான் நம்நாடு உனகிலேயே மிகப் பெரிய 'ஜனநாயக' நாடு என்ற பேரிரைச்சல்! அமெரிக்காவிற்கே தெரியாமல் அணுகுண்டு வெடிப்பு! எஸ்.எல்.வி ஏவுகணை 2,3,4.... என வானத்தில் பறக்கடிப்பு! கணினி உற்பத்தியில் முண்ணனி? மென்பொருள் தொழில் நுட்ப வல்லுநர்கள் ஏற்றுமதி! 'இந்தா ஆகப் போகிறது இந்தியா ஒரு வல்லரசாக!' என அளக்கிறார்கள் ஆள்வோர்களும் அரசியல்வாதிகளும்! இவை நிற்க. கொஞ்சம் நகரம் கலந்த கிராமம் புலியூரில் நம்மைச் சுற்றி அத்தகைய மக்கள் வாழவே செய்கிறார்கள். நம் வீதியிலும் பொருளியலில் நம்மிலும் அடுத்த நிலையில் - அதாவது 'ஹெச்' முத்திரை விளிம்பில் நாமும், 'ஹெச்' முத்திரைக்குக் கீழான நிலையில் பலரும் வசிக்கவே செய்கிறார்கள். அவர்களெல்லாம் கண்டு கொள்ளாத - உணர்வுப் பூர்வமாக யோசிக்காத - பிறந்த நாள் விழாவை நீ மட்டும் கொண்டாடினால் அவர்களின் குழந்தைகளுக்கு நீ ஒரு மோசமான முன்னுதாரணமல்லவா? அவர்களைவிட்டு நீ அந்நியப்படுவது சரிதானா? இது தேவைதானா? "அப்படியானால் அரசியல் தலைவர்களும் நடிகர்களும் நம்மைச் சுற்றியுள்ள பலரும் பிறந்த நாள் கொண்டாடுகிறார்களே, ஏன்?" என நீ கேட்பது எனக்குப் புரிகிறது. அந்தச் சாக்கில் கொஞ்சம் (கொஞ்சமாகவா?) வசூல் வேட்டையாகவும், மறந்துபோன மக்கள் மனதில் தங்களை மறுபதிவு செய்யவும், மக்களிடமிருந்து முன் உறிஞ்சிய - வசூலித்த பலகோடிகளில் சில இலட்சங்களை இறைத்து ஏழைகளுக்கு அன்னதானம் முதல் தாலிதானம் வரை வழங்கி கொடைவள்ளல் பட்டம் பெறவும் அரசியல்வாதிகளுக்கும் நடிகர்களுக்கும் பிறந்தநாள் விழா அவசியமாகிறது. சரியான ஜனநாயக இயக்கங்கள் மற்றும் இடதுசாரி இயக்கங்களின் தலைவர்கள் இம்மாதிரிப் பிறந்தநாள் 'பந்தா' பண்ணுவது கிடையாது. "ஒரே மாதிரியான - சலிப்பான வாழ்க்கைச் சுழற்சியில் இருந்து சற்றுமாறி உற்சாகமும் மகிழ்ச்சியும் பெற பல திருவிழாக்களைப் போல பிறந்தநாள் விழாவை நாம் ஏன் எடுத்துக் கொள்ளக் கூடாது? அன்றைக்குப் புதிதாய்ப் பிறந்தது போன்ற புத்துணர்ச்சியும் புது எழுச்சியும்பெற நம்மைப் போன்றவர்கள் பிறந்தநாள் கொண்டாடுவதில் என்ன தவறு?" என நீ கேட்கலாம். பொதுவாக திருவிழாக்கள் வழக்கமான நாட்களிலிருந்து ஒரு புத்துணர்ச்சியயும் மகிழ்ச்சியையும் கொடுப்பது உண்மைதான் எனினும் திருவிழாக்களின் பின்புலம் - திருவிழாவிற்கான காரணம் மிகக் கொடூரமானது! அந்தந்த மத அடையாளங்களை ஆழப்படுத்திக் கொள்ள (அக்கம் பக்கமாக மாற்று மதங்களின் மீது துவேசத்தை வளர்க்க ) மதரீதியான திருவிழாக்கள்! சாதிய இருத்தல்களை நிறுவனமயப்படுத்திக் கொள்ள ஊர்ச் சாமிகும்பிடுகள்! (பல நேரங்களில் சாதிய மோதல்களில் - குறிப்பாக ஆதிக்க சாதிகள் தலித்துகள் மீது மோதுவதாக அவை முடியும்) குலதெய்வச் சாமிகும்பிடுகளும் அங்காளி பங்காளிச் சண்டைகளில் முடியும்! சரி, சுதந்திர, குடியரசுதின விழா போன்ற தேசிய விழாக்கள்? அதுவும் மேல்மட்டத்தினரின் பிரச்சார மேடைகளாக - எதைப் போற்ற வேண்டும்? எப்படிக் கொண்டாட வேண்டும்? என்பது உட்பட பெரும்பான்மை மக்கள் மீது ஆளும் சிறுபான்மையின் கருத்துத் திணித்தலாக முடிகிறது. பொதுவாக 'விழாக்கள்' மனிதனுக்கு - அதுவும் சுரண்டலுக்கு உட்படுகிற ஏழை உழைக்கும் மக்களுக்கு அவசியமா? எனில் 'ஆம்' என்பேன். ஆனால், எம்மாதிரியான விழா? சாதிய ரீதியாகவும் - பொருளியல் ரீதியாகவும் ஒடுக்கப்படுகிற மக்களின் விடுதலைக்கான கருத்தரங்காக - பேரணியாக - மாநாடாக - பொதுக்கூட்டங்களாக கலைநிகழ்ச்சிகளாக - கலகங்களாக அது அமைதல் வேண்டும்! அதில் கலந்து கொண்டால் நமக்குப் புத்துணர்ச்சியும் புதுத்தெம்பும் கிடைப்பது உறுதி. பாரதிதாசன் கூறுவதுபோல 'அறிவை விரிவு செய்ய - அகண்டமாக்க - மானிடப் பரப்பைக் காண - மானிட சமுத்திரம் நானென்று கூவ' அம்மாதிரியான நிகழ்ச்சிகள் - திருவிழாக்கள் அவசியம். அவை மகிழ்ச்சிகரமானதாக இருக்கும் அதே வேளையில் அதிகாரத்தின் அடக்குமுறைக்கும் ஆளாக வேண்டிவரும். மேலும் அறிவுசார்ந்த - களப்பணி சார்ந்த பலரைக் காண்பதும், கருத்துப் பரிமாறுதலும், பகிர்ந்துண்ணுதலும் பசியும் பட்டினியும், நிகழ்ச்சி முடிந்து திரும்பும்போது பைசா இல்லாமல் ஒருவர் மற்றவர்க்காக சட்டைப் பையைத் தடவுதலும், உருட்டிப் புரட்டி காசு தேர்த்தி ஊர்வந்து சேர்தலும் நடக்கவே செய்யும். ஆம், 'புரட்சியே மக்களின் திருவிழா ' என்பார் மாவோ. அதற்கான முன்னோட்டங்கள் நிறைய நிகழும்போது எதிர்காலத்தில் நீ அதில் கலந்துகொள்ள வேண்டும் என்பதே என் ஆத்ம ஆசை. மக்களின் அடிமைத்தளைகளை ஏதோ ஒரு கோணத்தில் தகர்த்த - தகர்க்க முயன்ற தலைவர்களின் பிறந்த நாள் விழாக்களை நாம் வரவேற்கலாம். அது விழா என்ற அர்த்ததில் அல்ல. அவர்களின் தத்துவங்களை - பணிகளை மக்களுக்கு மீண்டும் எடுத்துச் செல்ல அது ஒரு கள நிகழ்வு என்ற அடிப்படையில்! இறுதியில் ஒன்றைக்கூறி முடிக்கிறேன். இந்தியாவில் பாட்டாளி மக்கள் விடுதலைபெற்ற மக்களாய்ப் பவனிவரவும், அவர்களின் பிற(ந்த நாளை)ப்பையே அர்த்தமுள்ளதாகவும் ஆக்க உன் உழைப்பு பயன்படுமேயானால், உன் பிறந்தநாளும் அர்த்தமுள்ளதாக உணரப்படும். அப்போது உன் பிறந்தநாள் உன்னால் மறக்கப்படலாம்; உன்னைச் சுற்றியிருப்போரால் நினைக்கப்படும். 'எல்லோரும் ஒருவருக்காக ஒருவர் எல்லோருக்காக' என்ற கார்ல் மார்க்சுக்குப் பிடித்த மேற்கோளையே உனக்கு நானும் வலியுறுத்துவேன். இன்றும் ... எதிர்காலத்திலும்....
அன்பு அப்பா வே.பிச்சைமுத்து ,
புலியூர் -12-12-2002
நன்றி: பயணம் புதிது (ஜனவரி-பிப்ரவரி-2004)