செவ்வாய், அக்டோபர் 24, 2006

மழை - 5 துளி - 4

சுதந்திரப் பறவை - அ.சிவகாமசுந்தரி

அந்தப் பறவை - ஒரு
சுதந்திரப் பறவை
எந்த கூட்டிற்குள்ளும்
அது அடைக்கப்படவில்லை
அதன் தேவைகள்
எதற்கும் தேடிப்போக
அவசியமின்றி நின்ற இடத்திலேயே
கேட்டுப் பெறும் சொகுசான
வீட்டுக்காற்றை சுவாசிக்கும்
அந்தப் பறவை - ஒரு
சுதந்திரப் பறவை

சிறுவயதில் ஏனோ அதன்
சிறகுகள் மட்டும்
முழுமையாய் வளருமுன்
முளையிலேயே வெட்டப்பட்டன.
பெரியதாய் வளர்ந்ததும்
பறக்க முயற்சித்ததால்
சிறகுகளுடன் சேர்ந்து
கால்களும் காணமல்போயின.

பறப்பதையே மறந்து
நடக்கவும் அறியாது
பிள்ளைகள் விளையாட
பார்ப்பவர்கள் பாராட்ட
பெருமையுடன் காட்சிப்பொருளாய்
நின்ற இடத்திலேயே நிற்கும்
அந்தப் பறவை - ஒரு
சுதந்திரப் பறவை!

-அ.சிவகாமசுந்தரி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக