ஞாயிறு, அக்டோபர் 15, 2006

மழை - 5 துளி - 3

எழுதாத கவிதை --- கைகாட்டி


இந்த நாள் இத்தனை விரைவில்
வருமென்று நான் எதிர்பார்க்கவில்லை

நான் தோல்வியினை எதிர்பார்த்திருக்கவில்லை,
ஏனெனில்
எதிரிகள் யாரும் எனக்கு இருந்திருக்கவில்லை.

நான் கனவிலும் நினைத்திருக்கவில்லை,
என் ஊன்றுகோல் உளுத்துப் போகுமென்று ;
என்றுமே எதிர்பார்த்திருக்கவில்லை,
என் இதயம் விழுந்து நொறுங்குமென்று.

இலவு வெடித்துவிடுமென்று தெரியும்தான் எனக்கு,
ஆனால் பூவிலே வெடிக்குமென்று அல்ல.

நான் அரிதாரம் பூசுமுன்பே
இங்கு விடிந்துபோய்விட்டது
இந்த பணம் அச்சடிக்குமுன்பே செல்லாததாகிவிட்டது.

உனக்கு என் இதயத்தை விளக்க ஓடி வந்தபோது
வாயிலிலேயே தெரிந்துகொண்டேன்,
வாய்ப்பில்லையென்று.

போட்டியில் கலந்துகொள்ளத்தான் தயாரானேன்.
அரங்கத்தின் வாசலிலேயே அறிந்துகொண்டேன்,
அனைத்தும் முடிந்துவிட்டதென்று.

தொலைபேசியின் மணி ஒலித்தபோதெல்லாம்
முன்னிருந்த ஒரு துள்ளல்
ஒரு இனம்புரியா எதிர்பார்ப்பு
எல்லாம் முடிந்தாயிற்று,
எல்லாம் முடிந்தாயிற்று.

எனக்கு அழத்தெரியவில்லை
இனம்புரியாத துக்கம்
என்னுள் பிரளயமாய்.

ஏனோ தெரியவில்லை, கண்களில் மட்டுமல்ல,
எனது பேனாவிலும் கசிவு.

தவறு செய்துவிட்டேன்
கவிதை புரியாத உனக்கு,
காதல் புரிய வாய்ப்பேயில்லை.

மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன்
என் காதலைச் சொல்லி
எந்தக் குழப்பத்தையும் உன் வாழ்வில் ஏற்படுத்திவிடவில்லை

காலம் கடந்து புரிந்துகொண்டேன்
வழிகாட்டத்தான் எனக்கு விதிக்கப்பட்டிருக்கிறது,
பயணம் செய்ய அல்ல.
---கைகாட்டி (ஏப்ரல் 25 , 2000)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக