சனி, அக்டோபர் 28, 2006

மழை - 5 துளி - 6

பொறாமை -புலியூர் முருகேசன்


எனக்குள்
பொறாமை மட்டுமே
மீதமாயிருக்கிறது.

கழிந்த நாட்களில் சுழன்ற காற்றாய்
வலம் வந்த அதே நான்தான்
கிழிந்த ஓவியமாய் இன்று
கலைந்து கிடக்கிறேன்

மற்றெப்பொழுதையும் விட
மற்றவர்கள் நிதானமாய்-
நம்பிக்கைத் துரோகம்
செய்து கொண்டிருக்கிறார்கள்

இமைகள் கருகக் கருக..
குளிர் காய்கிறேன்-
மூக்குத் துவாரங்கள் திணறத் திணற
சேற்றில் மூழ்கிக் கொண்டிருக்கிறேன்

என்னைக் குழிக்குள் புதைக்கும்
முனைப்போடு பல கைகள்
முன்பை விட பலத்தோடு
மண்வெட்டியை உயர்த்திப் பிடிக்கின்றன

நான் எல்லாம் இழந்தும்
எதையும் இழக்காமல் இருக்கிறேன்

மிகைப்படுத்தத் தெரியாத பிரியம்
அலங்காரமில்லாத அன்பு
எதிர்ப்பில்லாத சகிப்புத்தன்மை
தோள்களில் எந்நேரமும் கனக்கின்ற சிலுவை

எல்லாம் என் சேமிப்புகளென
பெருமிதத்தோடு நிமிர்ந்தேன்
செல்லாக் காசுகளென அவை
எல்லோராலும் தீர்மானிக்கப்பட்டது தெரியாமல்.

வார்த்தைகளால் முகத்தில் அறையச் செய்யும்
வித்தையைக் கற்றுக்கொள்ளவே முடியவில்லை.

மவுனத்தால் கேலி செய்யும் கலையும்
கைவரவில்லை -

எனக்குள் பொறாமை மட்டுமே
மீதமாயிருக்கிறது .....

1 கருத்து:

  1. தமிழர்கள் அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்

    இந்த ஆண்டு உங்கள் வாழ்வில் எல்லையில்லா மகிழ்ச்சியும், நோயற்ற வாழ்வும், குறைவற்ற செல்வமும், நீண்ட ஆயுளும் மற்றும் அனைத்து நலங்களும், வளங்களும் பெற்று வாழ வாழ்த்துகிறோம்.

    அன்புடன்
    www.bogy.in

    பதிலளிநீக்கு