ஞாயிறு, மே 30, 2004

மீண்டும் ஓடைக்கு. . .

மீண்டும் ஓடைக்கு. . ஞாயிறு, மே 30, 2004

ஒருவார காலமாக வலைப்பூவில் ஆசிரியராக இருந்து விட்டு இன்றுதான் திரும்பினேன். வலைப்பூவில் இருந்தபோது நான் நிறையக் கற்றுக்கொண்டேன். பல நல்ல நண்பர்கள் கிடைத்தார்கள். நிறைய சிந்தித்தேன்,எழுதினேன். மேலும் மேலும் நிறைய நூல்களைப் படிக்க வேண்டும், இன்னும் நம் எழுத்தை மேம்படுத்த வேண்டும், படைப்புக்களத்தை விரிவாக்க வேண்டும் என்ற ஆவல் ஏற்பட்டது. ஓடையிலும் நிறைய மாற்றங்களைக் கொண்டு வரவேண்டும், நிறைய பேரை எழுத வைக்க வேண்டும் என்று தோன்றியது.நான் கடந்துவந்த பாதையை இன்று திரும்பிப் பார்க்கிறேன். ஓடை உருவாகி தமிழ் புத்தாண்டோடு 4 வருடங்கள் முடிந்து விட்டன. காகிதத்தில் உருவாகி, மின்னஞ்சலில் உயிர் வாழ்ந்து, பின் யாஹூ மடற்குழுவுக்கு இடம் பெயர்ந்து இன்று வலைப்பதிவுக்கு வந்திருக்கிறது ஓடை. பலருடைய இளக்காரமான பார்வைகளைப் பொய்யாக்கி ஓடையை வற்றாமல் ஓட வைத்துக் கொண்டிருக்கும் மன உறுதியை நான் எங்கிருந்து பெற்றேன் ? நான் படித்து எனக்குள் பதிந்து வைத்திருந்த பல அறிஞர்களின் வாழ்க்கை வரலாறுகளில் இருந்து பெற்றேன் எனக் கொள்ளலாம். மேலும் பயணம் புதிது சிற்றிதழின் வளர்ச்சியை, அதனை வெளியிடுவதில் புலியூர் முருகேசன், பிச்சைமுத்து போன்ற நண்பர்கள் எதிர்கொண்ட போராட்டங்களை அருகிலிருந்து பார்த்தது ஒருவேளை எனக்கு இந்த உறுதியை அளித்திருக்கலாம். தன் படைப்பு வாழ்க்கைக்கும், படிப்பிக்கும் ஆசிரியத் தொழிலுக்கும் இடையில் நிறைய சிரமங்களை, இழப்புகளைச் சந்தித்தும் இயல்பாய் படைப்பைத் தொடர்ந்துவரும் திரு சகாராவின் வாழ்க்கையிலிருந்து நான் கற்றுக்கொண்ட பாடங்களாயிருக்கலாம். இவற்றுக்கும் மேலாய் என்மீது நம்பிக்கை வைத்துத் தங்கள் படைப்பாக்கங்களை எனக்கு அனுப்பி வைத்த தோழர்கள், தோழியர்கள் அனைவரது ஒத்துழைப்பும் காரணமாக இருக்கலாம். ஓடையைப் படித்துப் பாராட்டி குறைகளைச் சுட்டிக்காட்டி அதன் வளர்ச்சியில் அக்கறை கொண்ட நண்பர்கள் காரணமாக இருக்கலாம். மொழி புரியாதபோதும், என் எழுத்துப்பணியை ஊக்குவித்த எனது அலுவலக நண்பர்களின் அன்பு காரணமாக இருக்கலாம். எப்போதும் நூல்களில், கணினியில்,செய்தித்தாளில் புதைந்து சூழல் மறந்து உட்கார்ந்திருக்கும் என்னைப் புரிந்துகொண்டு பொறுத்துக் கொண்ட என் குடும்பத்தினரின் தியாகமாய் இருக்கலாம். இவற்றுக்கெல்லாம் நடுவில் நான் பிறந்து வளர்ந்த, மழையற்ற , வளமற்ற மண்ணில் இருந்து என்னை மாதிரி வெளியேறாமல் இன்னும் வாழ்ந்து உழன்று உயிர் வாழ்ந்து கொண்டிருக்கும் விவசாயக் குடியானவர்களின்நெஞ்சுரத்தில் இருந்து உருவாகி, எனக்குள் எழுப்பப்படும் என் இருப்பு குறித்தான தார்மீகக் கேள்விதான் என்னை முன்செலுத்துகிறது என்று நம்புகிறேன். அக்கேள்வியின் முன்னால் தோற்றுப்போகாமல் இருக்கவே நான் எழுதுகிறேன் என்று நினைக்கிறேன்.

சனி, மே 29, 2004

தமிழ் செம்மொழியாவதும் சில குரல்களும்

சில குரல்கள்

தமிழ் ஒரு செம்மொழியாக இத்தனை நாள் ஏன் ஆக்கப்படவில்லை என்று கவலைப்படாமல் இதை திராவிட இயக்கத்தின் பம்மாத்து என்று சிலர் பரிகசிப்பது வேதனையாக இருக்கிறது. மற்ற மொழியினர் பயப்படுவார்கள் என்ற சப்பைக்கட்டு வேறு. தமிழ் மொழி மற்ற மொழிகளை என்றும் ஒழிக்க முயற்சி செய்ததில்லை. ஆனால் இந்தியின் மூலம், இராஜஸ்தானி,பிகாரி போன்ற மொழிகள் ஒழிக்கப்பட்ட/படுகிற வரலாறுகளை நாடே அறியும். தமிழ் செம்மொழி என்பதை உத்திரப்பிரதேசத்தில் கூட ஏற்றுக்கொள்கிறார்கள். எதிர் கருத்தை இதுவரை நான் கேட்கவில்லை. என்னுடன் மலையாளிக்ள் வேலை செய்கிறார்கள், தெலுங்கர்கள் இருக்கிறார்கள், மராத்தி பேசுபவர்களும் இருக்கிறார்கள். திருக்குறளின் ஆங்கில மொழியாக்கத்தை என்னிடம் கேட்டுப் படிப்பவர்களும் உண்டு. யாரும் இதுவரை அதை ஒரு பிரச்சினையாகப் பேசவில்லை. இந்திக்காரர்கள் பயப்படாதபோது தம்ழ்நாட்டில் சிலபேருக்கு எங்கிருந்து பயம் முளைத்தது எனத் தெரியவில்லை. தமிழ்நாட்டிலிருந்து இப்படிக் குரல் கிளம்புவது வேதனை அளிக்கிறது. இந்தியை வளர்க்கும் பொருட்டு எவ்வளவு செலவு செய்கிறார்கள் என்பதை நாங்கள் எங்கள் அலுவலகத்தில் பார்த்து வருகிறோம். ஒரு தனிப்பட்ட மொழியை வளர்ப்பதற்கு ஒரு நாடு முழுவதிலும் திரட்டப்பட்ட வரிப்பணத்தைச் செலவு செய்வது குறித்துக் குரல் எழுப்ப யாருமில்லை. 'தமிழக அரசியலில் ஆளாளுக்கு இதைக் கேட்டுக்கொண்டிருக்கின்றனர். ' என்கிறார் பத்ரி. இது அரசியல்வாதிகளின் கோரிக்கை மட்டும் அல்ல. மக்களின் கோரிக்கை கூட. 'எது எப்படியிருந்தாலும் வரலாறு என்ன சொல்லும்? திமுக-க்கு நிறைய ஸீட் இருந்தது.. கழுத்துல கத்திய வெச்சி வாங்கிட்டானுவன்னு தானே?' என்கிறார் ஹரி. வரலாறு சொல்கிறதோ இல்லையோ, உங்களைப்போன்றவர்கள் சொல்லிக்கொண்டுதான் இருந் தார்கள், மேலும் இருப்பார்கள். இதுவொன்றும் புதிதில்லை. அது தமிழ் நாட்டின் தலையெழுத்து.
இதையெல்லாம் மீறித்தான் தமிழும் தமிழனும் வளர்ந்து வருகிறார்கள்
இதையும் படியுங்கள்

வியாழன், மே 06, 2004

கேலிக்கூத்து

2,3,5,..22,...
இவையெல்லாம் என்னவென்று கேட்கிறீர்களா?
நேற்று எங்கள் ஆலையில் வேலை செய்யும் ஒப்பந்த ஊழியர்கள் சிலர் போட்டுவிட்டு வந்த கள்ள வாக்குக்களின் எண்ணிக்கை.(இவை அனைத்துமே பாஜக வுக்குப் போட்ட வாக்குக்கள்) முலாயம் சிங்கின் சொந்த ஊரான இடாவா தொகுதியில்தான் எங்கள் ஆலை அமைந்துள்ளது. உண்மையான வாக்குச் செலுத்தச் சென்ற எங்கள் பொறியாளர்கள் சிலர் அடித்துத் துரத்தப்பட்டார்கள்!! 'துமாரா வோட் டால்னேகேலியேதோ ஹம் ஹெய்னா ' (உங்கள் வாக்கைச் செலுத்தத்தான் நாங்கள் இருக்கிறோமே) என்று அந்த குண்டர்கள் கத்தியதாகக் கேள்வி. தேர்தல் பணிக்கு அதிகாரிகளாகச் சென்ற எங்கள் உதவிப் பொறியாளர் ஒருவரின் வாக்குச் சாவடியில் பாஜக,சமாஜ்வாதி இரண்டு கட்சிகளுக்கும் நடந்த சண்டையில் மின்னணு வாக்குப் பெட்டியை NDTV-யின் காருக்குள் ஒளித்து வைத்துக் காப்பாற்ற வேண்டிய நிலை. அரை நூற்றாண்டு காலமாக எப்படி உ.பி, பீகாரில் தேர்தல் நடக்கிறது என்பதை கண்கூடாகத் தெரிந்து கொள்ள முடிந்தது.

திங்கள், மே 03, 2004

மழை 4 துளி 4

மறுபடியும் - புலியூர் முருகேசன்

மறுபடியும் -
நம் வாக்குகளுக்குச் சவப்பெட்டி!

இருப்பவர்களுக்காக இரக்கப்படத் தெரியாமல்
பிணங்களுக்காக பரிதாபப்படும் இந்தியர்கள் நாம்!

பாராளுமன்றத்தில் வேதம் ஓதும் சாத்தான்களுக்காகவே
பிணம் காய்ச்சி மரங்கள் வளர்கின்றன.

ஜாதி மத வேறுபாடின்றி எல்லாப் பேய்களும்
எப்படியோ தயாராகி ஒன்றுபடுகின்றன
பிண அறுவடை நாளில் !

அழுகிய, பிணி பிடித்த , துர்நாற்றம் கிளப்புகிற
பிணங்களைக் கூட கட்டியணைத்து
முத்தம் கொடுக்கிற அளவிற்கு
மோகம்
அந்த சுடுகாட்டு நாற்காலி மேல் !

எச்சரிக்கை -
பாராளுமன்றத்தில் ஒப்பாரி வைக்க
பிணங்களைச் சேகரித்துக் கொண்டேயிருந்தால் -

ஒருநாள்
இந்தியாவில் பாராளுமன்றம் இருக்காது -
பாரழுமன்றம் மட்டுமே மீதமாயிருக்கும்
ஊர் ஓர சுடுகாடு போல.