ஞாயிறு, மே 30, 2004

மீண்டும் ஓடைக்கு. . .

மீண்டும் ஓடைக்கு. . ஞாயிறு, மே 30, 2004

ஒருவார காலமாக வலைப்பூவில் ஆசிரியராக இருந்து விட்டு இன்றுதான் திரும்பினேன். வலைப்பூவில் இருந்தபோது நான் நிறையக் கற்றுக்கொண்டேன். பல நல்ல நண்பர்கள் கிடைத்தார்கள். நிறைய சிந்தித்தேன்,எழுதினேன். மேலும் மேலும் நிறைய நூல்களைப் படிக்க வேண்டும், இன்னும் நம் எழுத்தை மேம்படுத்த வேண்டும், படைப்புக்களத்தை விரிவாக்க வேண்டும் என்ற ஆவல் ஏற்பட்டது. ஓடையிலும் நிறைய மாற்றங்களைக் கொண்டு வரவேண்டும், நிறைய பேரை எழுத வைக்க வேண்டும் என்று தோன்றியது.நான் கடந்துவந்த பாதையை இன்று திரும்பிப் பார்க்கிறேன். ஓடை உருவாகி தமிழ் புத்தாண்டோடு 4 வருடங்கள் முடிந்து விட்டன. காகிதத்தில் உருவாகி, மின்னஞ்சலில் உயிர் வாழ்ந்து, பின் யாஹூ மடற்குழுவுக்கு இடம் பெயர்ந்து இன்று வலைப்பதிவுக்கு வந்திருக்கிறது ஓடை. பலருடைய இளக்காரமான பார்வைகளைப் பொய்யாக்கி ஓடையை வற்றாமல் ஓட வைத்துக் கொண்டிருக்கும் மன உறுதியை நான் எங்கிருந்து பெற்றேன் ? நான் படித்து எனக்குள் பதிந்து வைத்திருந்த பல அறிஞர்களின் வாழ்க்கை வரலாறுகளில் இருந்து பெற்றேன் எனக் கொள்ளலாம். மேலும் பயணம் புதிது சிற்றிதழின் வளர்ச்சியை, அதனை வெளியிடுவதில் புலியூர் முருகேசன், பிச்சைமுத்து போன்ற நண்பர்கள் எதிர்கொண்ட போராட்டங்களை அருகிலிருந்து பார்த்தது ஒருவேளை எனக்கு இந்த உறுதியை அளித்திருக்கலாம். தன் படைப்பு வாழ்க்கைக்கும், படிப்பிக்கும் ஆசிரியத் தொழிலுக்கும் இடையில் நிறைய சிரமங்களை, இழப்புகளைச் சந்தித்தும் இயல்பாய் படைப்பைத் தொடர்ந்துவரும் திரு சகாராவின் வாழ்க்கையிலிருந்து நான் கற்றுக்கொண்ட பாடங்களாயிருக்கலாம். இவற்றுக்கும் மேலாய் என்மீது நம்பிக்கை வைத்துத் தங்கள் படைப்பாக்கங்களை எனக்கு அனுப்பி வைத்த தோழர்கள், தோழியர்கள் அனைவரது ஒத்துழைப்பும் காரணமாக இருக்கலாம். ஓடையைப் படித்துப் பாராட்டி குறைகளைச் சுட்டிக்காட்டி அதன் வளர்ச்சியில் அக்கறை கொண்ட நண்பர்கள் காரணமாக இருக்கலாம். மொழி புரியாதபோதும், என் எழுத்துப்பணியை ஊக்குவித்த எனது அலுவலக நண்பர்களின் அன்பு காரணமாக இருக்கலாம். எப்போதும் நூல்களில், கணினியில்,செய்தித்தாளில் புதைந்து சூழல் மறந்து உட்கார்ந்திருக்கும் என்னைப் புரிந்துகொண்டு பொறுத்துக் கொண்ட என் குடும்பத்தினரின் தியாகமாய் இருக்கலாம். இவற்றுக்கெல்லாம் நடுவில் நான் பிறந்து வளர்ந்த, மழையற்ற , வளமற்ற மண்ணில் இருந்து என்னை மாதிரி வெளியேறாமல் இன்னும் வாழ்ந்து உழன்று உயிர் வாழ்ந்து கொண்டிருக்கும் விவசாயக் குடியானவர்களின்நெஞ்சுரத்தில் இருந்து உருவாகி, எனக்குள் எழுப்பப்படும் என் இருப்பு குறித்தான தார்மீகக் கேள்விதான் என்னை முன்செலுத்துகிறது என்று நம்புகிறேன். அக்கேள்வியின் முன்னால் தோற்றுப்போகாமல் இருக்கவே நான் எழுதுகிறேன் என்று நினைக்கிறேன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக