சனி, ஏப்ரல் 24, 2004

மழை 4 துளி 3

எல்லைகள் என்பது முடிவு அல்ல
- அ.சிவகாமசுந்தரி

சிட்டுக்குருவிக்கு சிறகொடிந்துபோனால்
உள்ளம் சோர்ந்து ஓய்ந்து விடுமா?
சிறகுகள் முளைத்ததும் மீண்டும்
விண்ணில் பறக்க முயற்சிக்காதா?
அடிபட்டு வீழும் வேங்கை
அமைதியாய் அடங்கி ஒடுங்கிடுமா?
பின்பு புயலெனச் சீறிப் பாயாதா?
எல்லைகள் என்பது முடிவு அல்லவே!
வெட்ட வெட்ட ரோமங்கள் கூட
ரோசம் கொண்டு முளைக்கின்றதே!
மயிர் நீப்பின் உயிர் வாழாக்
கவரிமான்கள் நமக்கு வேண்டாம்
எதை இழ்ந்தாலும் தன்னம்பிக்கையை
இழக்காத மனமே வேண்டும்
உடலில் உயிர் என்ற ஒன்று
உள்ளவரையில் போராடு
தோல்விகள் உன்னை தலைவனாக்கும்
வெற்றியோ உன்னை அடிமையாக்கும்
உன் வாழ்க்கைக் காட்டில் இடிஇடித்தால்
இடிந்துபோய் விழுந்து விடாதே
கண்டிப்பாய் ஒரு மின்னல் ஒளி
உண்டாகும், இன்ப மழை
விரைவில் பெய்யும் என நம்பு
வரும் தோல்விகளை உன்
வலிய தோள்களின் மீது தாங்கு
ஆனால் இதயத்தில் போட்டு அழுந்தாதே
வெற்றி உன் காலடியில்
தானாக வந்து வீழும்!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக