புதன், ஏப்ரல் 07, 2004

மழை-2 துளி-6

பனிப் பொழுதில் - தேன் சிட்டு

வானம் ஏனோ
குழைந்து போகும்,
சூழல்கள் கனிவாய் இருண்டு வரும்
வெண் பறவைகள் வேகமாய்
இறக்கை அடித்து
பறந்து சென்றே
பனிமழையின் வரவை
தன்பக்கத்து வீட்டிற்கும்
சொல்லிச் செல்லும்

இதென்ன ?
ஆகாயம் பூமிக்கு
தந்த நன்கொடையா ?
இரு சொட்டு
பூ பஞ்சில் தொடங்கி
கண்ணாடித் துளியென
பெருவெள்ளமாய்
கொட்டிக் கொட்டி
நிறைந்து போகும் இவை
அள்ள அள்ளக் குறையாத

அமுத சுரபிகள்
பூமி இறைவனின்
ஓவியக் கூடாரமாய்..
எவருமே தீட்டிடாத வெண்ணிற ஓவியங்கள்
இயற்கைமீதே
எழுதிவிட்டான்,
இறைவன் இன்று,
அற்புதக் காட்சி இது..

பனிவைரத் துகள்கள்,
சாரப் பாம்பென
ஊர்ந்து செல்லும்
மரக் கிளையெங்கும்
வெண் கம்பளமே
நிறைந்திருக்கும்
வீதியெல்லாம்...
வெண்ணிறமே
எங்கெங்கும் பற்றிப் படர்ந்து செல்லும்
எல்லையில்லாமல்...

மாக்கோலமென
உலகமெங்கும் , புது
வெள்ளையடிப்பு
ஓ, பூமிக்குக் கூட
இங்கு உருமாற்றமா ?
உயிர் பிசையும்
ஊதக் காற்றை
துணையாய் இழுத்துவந்து
மனிதர்க்குக் கTருத் தரும்
புதுவித
உதறல் நடனம்....
வெண்ணிற மணலை
அள்ளியே எடுக்கக்
கரகரவென்றே சில சப்தங்கள்..
முதல் மொழி பேச
விழைந்திடும்
வெண்குழந்தையின்
சில முன்னுரைகள்..

பனிமழையே..
இளகிப் போய்
விழுகிறாய் வானிலிருந்து,
பின் இறுகிப் பாறையானது உன் முகம்,
வெயில் சுள்ளென
சுட்டால் மீண்டும்
இளகிப் போகிறாய்...
மனிதர்களைப் போல்
உணர்வுண்டா உனக்கும்?
ஆட்டுக் குட்டியாய்
போர்வக்குள் சுருண்டாலும்,
மெல்லக் கதவைத்த் திறந்து,
மெது மெதுவாய்
வெளியே வந்து
தடுக்கித்தான் விழுகிறது மனசு,
பனிமழைக்குள்.....

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக