புதன், ஏப்ரல் 07, 2004

மழை-2 துளி-1


சுவாசித்தலுக்கான நியாயங்கள் - சகாரா
(நதிக்கரையில் தொலைந்த மணல் கவிதைத் தொகுப்பிலிருந்து)


அவசரமாய்ப் போகும்போது
ரோட்டில் கிடந்த முள்ளை
எடுத்துப் போடாமல் வந்ததற்கு
மனசு குத்தியதுண்டா ?

ஆசையாய்க் கொஞ்சி வளர்த்த
பறவை / விலங்கு இறந்த வேளையில்
நெருங்கிய உறவை இழந்ததுபோல
துக்கப்பட்டதுண்டா ?

அறிமுகமில்லாத ஒருவர்
முகவரிக் குழப்பத்தில் திண்டாடியபோது
தெரிந்தவரைக்கும் சரியாக
வழிகாட்டியதுண்டா?

நலிந்தவர் மூத்தவர்
நிற்கத் தடுமாற
சிரமப்பட்டுப் பிடித்த இடத்தை
விட்டுக் கொடுத்ததுண்டா ?

விபத்தில் சிக்கி
காயம்பட்ட யாரோ ஒருவருக்காக
நெஞ்சு கிடந்து
அடித்துக்கொண்டதுண்டா ?

பாதையைக் கடக்கையில்
அணிற்பிள்ளை குறுக்கிட
பதறியடித்து
பிரேக் போட்டதுண்டா ?

அப்படியானால்
வாழ்த்துக்கள்

இன்னும் நீங்கள்
மனிதராய் இருக்கிறீர்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக