வியாழன், ஏப்ரல் 08, 2004

மழை-3 துளி-8

மழையின் பாடல் : கலீல் ஜிப்ரான்
தமிழில் கர்ணன்


இறைவன் வானத்திலிருந்து தொங்கவிட்ட
வெள்ளி நூலிழை நான்
என்னை அணைத்து
நிலம், பள்ளத்தாக்குகளை அழகுபடுத்தியது இயற்கை

தோட்டங்களை அழகுபடுத்த
இஸ்தரின் மணிமுடியிலிருந்து
வைகறையின் புதல்வி
பறித்து வீசிய அழகிய முத்துக்கள் நான்

நான் அழுகின்றபோது மலை சிரிக்கும்
என் அமைதி மலர்களுக்கு மகிழ்ச்சி
நான் தலைவணங்கும்போது அனைத்தும் உயரும்

நிலமும் மேகமும் காதலர்கள்
அவர்களுக்கிடையில் நான் அன்புத்தூதுவன்
ஒருவரின் தாகத்தை தீர்க்கிறேன்
இன்னொருவரின் வேதனைக்கு மருந்தாகிறேன்

என்வருகையை இடி முழங்குகிறது
வானவில் எனக்கு விடையளிக்கிறது
தெளிவற்ற பிரபஞ்சத்தின் அடியில் தொடங்கி
மரணத்தின் விரிந்த சிறகுகளின் கீழ் மடியும்
சாதாரண வாழ்வுதான்- என் வாழ்வு

கடலின் இதயத்திலிருந்து வெளியேறி
தென்றலைத் தழுவுவேன்
நிலத்தின் தேவைகண்டு இறங்கி வருவேன்
மலர்கள் மரங்களை
பல ஆயிரம் விதங்களில் அணைத்துக்கொள்வேன்

என் மென்மையான கரங்களால்
சாளரங்களை வருடுகிறேன்
என் உச்சரிப்பு ஒரு வரவேற்புபாடல்
அனைவராலும் கேட்கமுடியும்
ஆனால் உணர்ச்சிமிக்கவர்கள் புரிந்துகொள்கிறார்கள்

காற்றின் வெப்பம் என்னை பிரசவிக்கிறது
ஆனாலும் அதனை கொன்றுவிடுகிறேன்
ஆணிடமிருந்து வலிமைபெற்று
பெண் அவ்னை வெல்வதுபோல்

நான் கடலின் பெருமூச்சு
நிலத்தின் சிரிப்பு
வானத்தின் கண்ணீர்

அதனால் காதலைப்போன்று-நான்
ஆழமான அன்புக்கடலின் பெருமூச்சு
உயிரின் வண்ணமயமான சிரிப்பு
முடிவில்லா ஞாபக வானத்தின் கண்ணீர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக