செவ்வாய், ஏப்ரல் 13, 2004

ஓடை பழைய படைப்புகள் 20

ஓடை மே 2000 தாள் 8

தாய்மை ---திருமதி. ஜப்பார்


கண்ணுக்குள் மணியை
இமை காப்பது போல்
கண்மணியே நானும் உனை
கருவறையில் கருத்தாய் காத்திட்டேன்

கண் துஞ்சாது கனவு கண்டேன்
கற்பனையில் நீ எனைப் பார்த்து
கண்மலரத்தான் சிரித்தாய்.
கால்தூக்கி தளிர் நடை போட்டாய்.

அதிர நான் நடந்தால் அழுவாயோ நீ என்று
அடிமேல் அடி வைத்தேன்
அழகே உன்னை வளர்த்திட்டேன்

என்ன பெயர் வைக்கவென்று ஏழு கோடி பெயர் மறுத்து
புதியதாய் ஒன்று சொல்லென
பார்ப்போரையெல்லாம் கேட்டுச் சலித்தேன்.

பிடித்ததெல்லாம் வெறுத்து-
வேண்டாமென மறுத்ததெல்லாம் உண்டு மகிழ்ந்தேன்,
மகவே அதுவுனை வளர்த்திடும்
மகிழ்வாய் மனம் பொங்கிடுமென்று.

நின்றாய், நிமிர்ந்தாய், நேசித்தாய்
மகனாய், மாணவனாய், மருத்துவனாய்
மனந்தனிலே நாளொரு வண்ணம்
நான் போட்டேன் கோலம்.

நாட்கள் நகர நகர
வலியும் வலிமை தந்தது- எனக்கு
அம்மா என்ற சொல்லின்
அருமை தெரிந்தது, பொருள் புரிந்தது.

காதலில் வேண்டுமானால் காத்திருத்தல் சுகமாகலாம்
தாய்மையிலோ காத்திருத்தல் - தவமல்லவா ?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக