வியாழன், ஏப்ரல் 08, 2004

மழை-3, துளி-12

நாற்று -கைகாட்டி

1.


ஈர மண்ணாய் நான்
இருந்ததை அறியாமல்
விதையாய் வந்து
விழுந்தாய் என்னுள்

இயற்கை தனது கடமை செய்தது.
இறுக்கமாய் வேர்கள் இதயம் பரவி,
மரமாய் வளர்ந்து
மனதுள் பூத்தாய்.

ஆலாய் நீயிருப்பது அறியாது அவர்கள்
நாற்று ஒன்றை நட்டுச் சென்றனர்.
வேர்விட இடமின்றி நாற்று நலிந்தது.
மரத்தின் இருப்பு மெல்லத் தெரிந்தது.

கோடரி கொண்டு கொய்யும் முயற்சியில்
மரத்தோடு சேர்ந்து தினமும் சாகிறேன்
மறக்க வழியில்லை மறைக்கத் தெரியலை
மனதுக்குள் நாளும் மடிந்து போகிறேன்

காலக் கணக்கு வேறாய் இருக்கு
வாழ்க்கையே ஒரு சமன்பாடானது
மரத்துக்கு நாற்றோ பதிலீடானது?

2.

முகம் பார்க்காது முப்பது மாதங்கள்
நட்பு நட்பு என்றே நடந்தோம்

உறவாய், உருவாய் நெஞ்சில் கருவாய்
பிறவிப் பேறாய் பிணைந்து நின்றாய்

மனம் உடைந்தபோது மடி கொடுத்தாய்
கோபம் கொண்டபோது குழைந்து போனாய்
தாகம் கொண்டபோது ஆறாய்ப் பரந்தாய்
விழிப்பில், கனவில், வினையில் நின்றாய்

வழியில் துணையாய் வலியப் பிணைந்தாய்
வலியை எனக்கு வரமாய்க் கொடுத்தாய்

குட்டையாய்க் கிடந்தேன் வாரியாய் இணைந்தாய்
ஆறாய் மாறாமல் காலம் பிரித்ததோ ?

மணலில் வரியாய் மறைந்து போகாமல்
கல்லில் சிற்பமாய் செதுக்கி நிற்கிறாய்

3.

தொலைவில் இருந்து கல்லெறிந்தாலும்
கண்ணாடி என்னவோ உடைந்துதான் போனது

மின்னலைகளை வெறுக்கிறேன்
ணர்ச்சியைக் கொன்று வெறும்
உமியை உன்னிடம் சேர்த்து வந்ததோ?

கிழிந்த மனதில் நூலாய் விழுந்தாய்
ஊசியின் வேகத்தில் மீண்டும் கிழிந்ததே!
பறியில்லை, துணியில்லை
பலமுறை இணைத்துப் பலன் காண்பதற்கு

செங்கரையான் தின்ற வீணையை
சங்கீதக் கச்சேரிக்கு எடுத்துப் போகிறார்.
கோபுர மாடம் இடிந்து வீழ்கையில்
புறாவிற்கு இங்கு துணையாவார் யார் ?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக