செவ்வாய், ஏப்ரல் 13, 2004

ஓடை பழைய படைப்புகள் 19

ஓடை மே 2000 தாள் 7

ஓர் இரவு - விசிறி


ஓடு ஓடு என்று ஓடுகிறேன். முன்னால் என்ன இருக்கிறது என்றே தெரியவில்லை. என்ன ஒரு இருட்டு , காரிருட்டு கிலியூட்டும் என்பதுதான் எவ்வளவு பெரிய உண்மையாகிவிட்டது ? இந்த இருட்டினால்தான் கண் தெரியவில்லையா அல்லது பார்வையே மங்கிப் போய்விட்டதா ? சிறு மரக்கிளைகள் முகத்திற்கு நேராக வருகிறது. அதில் மோதிக் கொள்ளக்கூடாது, ஓடுகிற வேகமும் குறையக்கூடாது. காலை அகட்டி, தாவித் தாவி ஒருகாலை இலைச் சருகுகளினூடேயும், அடுத்த தப்படியை கருங்கல் சரட்டு மேலேயும் வைத்து ஓட வேண்டியிருக்கிறது.


வானம் கூடத்தெரியவில்லை. வானத்திலிருக்கிற நட்சத்திரம், நிலா எதுவும் தெரியவில்லை. அடர்ந்து ஓங்கியிருக்கிற மரங்களால்தான் இந்த இரவு ஒரு கும்மிருட்டாகிவிட்டது. ஏன் இந்த ஓட்டம் ? எனக்குப் பின்னால் அப்படி என்னதான் ஆபத்து ? நினைத்துப் பார்க்கக்கூட முடியவில்லை. எந்தவிதமான ஆபத்து என்று தெரியாத போது.... அது ஒரு பயங்கரம். அதனால் பயமும், இதயத்தின் துடிப்பும் வேகாக அதிகரிக்கிறது. இந்த மாதிரியான சூழல் ஒரு கொடுமைதான்.


ஓட்டத்தின் நடுநடுவே, இலைக்கொடிகள் காலில் சிக்குவதும், குறுஞ்செடியின் முற்கள் உடலைக் கிழிப்பதையும், அவைகள் ஏற்படுத்தும் இரண வேதனையையும் உணரத்தானே முடிகிறது. ஆ...! என்ன அந்தரங்கத்தில் ஓரிரு வினாடிகள் மிதந்த மாதிரி... 'பச்' என்றொரு சத்தம். அவ்வளவுதான் கைகளைக் கூட ஊன்ற முடியவில்லை.

நல்ல வேளை, வலிக்கிற அளவிற்கு அடிபடவில்லை. இருந்தாலும் என்ன இது முகத்தில், உடல் முழுவதும் மசமசவென்று, சேறாகத்தானிருக்க வேண்டும். ஹம்... என்ன ஒரு நாற்றமும் இல்லை, மண் வாசனையைத்தவிர?

சீக்கிரமே எழ உல் மனம் கட்டளையிட, புதைகுழியாக இருக்கப் போகிறது என்ற பயம் வேறு. தட்டுத்தடுமாறி ஓடு, ஓடு என்று மனத்தாக்கல். இப்பொழுது அதிக எடை சேற்றால் சேர்ந்து விட்டதை நன்கு உணர முடிகிறது. கைகளையும் கால்களையும் உயர்த்துவதற்கு என்ன கஷ்டமாக இருக்கிறது. முடியவில்லை என்றே தோன்றுகிறது.

இன்னும் முயற்சி செய். எழுவதற்கு முடியும். இது நம்மால் முடியும். எழுந்து ஓட முடியாதா, என்ன ? உடலில் வலுவையெல்லாம் ஒன்று திரட்டி எழுந்தால்..... எங்கிருந்தோ சன்னமாக shift பஸ்ஸின் ஹாரன் ஒலி கேட்கிறது. உடல் பூராவும் மொட்டு மொட்டாக வேர்த்து விருவிருத்துப் போயிருக்கிறது. சுவர்க் கடிகாரத்தின் ஒற்றை மணியோ?ஓசையில் எல்லாம் கலைந்து
A shift செல்ல வேண்டிய உண்மை மண்டையில் சுளீரென்று உறைத்தது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக