திங்கள், ஏப்ரல் 12, 2004

ஓடை பழைய படைப்புகள் 14

ஓடை மே 2000 தாள் 2

மீளாத்துயர் -கைகாட்டி

உன் கால் தொட்டு
கடைசி ஆசிர்வாதம்
வாங்கிக்கொள்ள
எனக்கு வக்கில்லை.

வயிற்றுப்பாட்டுக்கு
வாழ்வின் துரத்தலில்
இத்தனை தூரம் வந்த பிறகு
உனது கடைசிச் சுவாசத்தின்போது
என்னால் உடனிருக்க முடியவில்லை.

பணங்கள் சேர்த்து,
பதவி ஆண்டு
என்ன பயன்?
மண்ணில் கால் பரவவிடாது
என்னை உயிராய்
தோளிலும் மடியிலும்
போட்டு வளர்த்த உனக்கு
ஒரு துளி நீர் கொடுக்க
எனக்கு வாய்க்கவில்லை

உன் அடக்கத்தின்போது
சமாதிக் குழியில்
ஒருதுளி கண்ணீர் விட
நான் வந்து சேரவில்லை.

என் பேரனைப்பார்க்க வேண்டும்
என்ற உன் கடைசி ஆசை
நிறைவேறவேயில்லை

எல்லாம் முடிந்து
நான்கு நாட்கள் கழித்து
உன் சாவுக்கு வந்த
இந்த சூழ்நிலைக் கைதியை
மன்னித்துவிடு.

உண்மையில்
செத்துப் போனது நீயில்லை
துக்கத்தில் தேவைப்பட்டபோது
ஆறுதலாய் அனைவருக்கும்
ஒரு வார்த்தை சொல்ல
வழியில்லாது போன
நான்தான்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக