புதன், ஏப்ரல் 07, 2004

மழை-2 துளி - 25

நம் மவுனத்தின்
இடைவெளியெங்கும்
பரவிக் கிடக்கிறது
இதுவரையில் எவராலும்
பாட இயலாத
காதலின் வரிகள்.

விடியல் கதிரின்
நீ....ளம்
தாண்டிப் போகிறது
தூக்கத்திற்கான தேடல்.

எத்தனை முறையும்
களைத்துக் கட்டலாம்தான்,
மணல் வீடல்லவே
மனங்களின் பிணைப்பு.

இறுக்கிப் பிடித்த
மணலாய்க் கரையும்
வைராக்கியத்தின்
காவு கேட்கின்றதே
கனியாத காதல்..

கிழித்துத் தைத்து
கிழித்துத் தைத்து
என்ன பயன்?
வளர்கின்ற
ஒவ்வொரு திசுவிலும்
உன் பெயர்...

எல்லைகள் தொட்டு
என்னுள் இறந்திடும்
எல்லா உணர்விலும்
ஏனிந்த வலி?

எடுத்துக் கொடுத்த
எல்லா மெட்டுகளிலும்
இணைப்பாய்
வருகிறதேன்
இந்தச் சோகம் ?

எரிகின்ற சுடரின்
ஒவ்வொரு துளியிலும் உன் முகம்.
எண்ணெயாய்
எத்தனை நாளைக்கு நான் ?

---கைகாட்டி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக