திங்கள், ஏப்ரல் 12, 2004

ஓடை பழைய படைப்புகள் 17

ஓடை மே 2000 தாள் 5

விழியில் முள் -----கைகாட்டி

இத்தனை நாட்களாய்
இதயங் கசியத்
தவித்துக் கிடந்தது
ஒரு முகந்திருப்பலுக்காகத்தானா?


ஹலோ என்ற ஒற்றை வார்த்தை
எப்படித்தளர்த்தும்
இரண்டு மாதத்திய இறுக்கத்தை ?


எனது தனிமையான
தருணங்களிலெல்லாம்
இமை முடியே
கண்ணுக்குள் விழுந்ததைப்போல்
நீ சொன்ன வார்த்தைகள்
உறுத்துகின்றன.

நாம் இருவருமே
அடுத்தவரிடமிருந்து எதிர்பார்ப்பது
ஒரே ஒரு சொல்லைத்தான்.
முதலில் சொல்லிவிடாது
நம் மனச்சிறைகளைப்
பின்னி வைக்கிறோம்.

நம் உடைபடா
மவுனம்
உணர்த்துவதெல்லாம்
எனக்குள் நீயும்,
உனக்குள் நானும்
உருகிக்கொண்டிருப்பதைத்தான்.

நீ தேவையில்லை என்று
இருவரும் சொல்லத்தான் செய்கிறோம்,
உள்ளுக்குள்
இதயங்களை நிறுத்தி வைத்துக்கொண்டு.

உன்னில் இயங்குமென் உயிர்,
என்னில் இயங்குமுன் உயிர்
இரண்டும் சேரும் வரை
ஊனில்லை,
உறக்கமுமில்லை.

கூறுபட்ட உள்ளத்தின்
இடுக்குகளிடயே
இன்னும் மிச்சமிருக்கிறது
நம் காதல்.
மறுக்கவும், மறைக்கவும்
நம் உதடுகளுக்கும் உள்ளத்திற்கும்
ஏனிந்த
ஏகப்பட்ட இடைவெளி ?

இதுதான் முடிவென்றால்
நாம் இன்னொருமுறை
சந்திக்க வேண்டாம்.
இந்தக் கொப்புளம்
தானாய் உடையட்டும்.
சொரிந்து புண்ணாக்க வேண்டாம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக