வியாழன், ஏப்ரல் 08, 2004

மழை 3 துளி 15

வேதபுரிகள் - கர்ணன்

மனிதன்
வெகுகாலத்திற்கு முன்பு
உழவு கற்று
ஊர் அமைத்திருந்த நேரம்
காற்றும்
மழையோடு இடியும் மின்னலும்
இன்னபிறவும்
பயமுறுத்திக்கொண்டிருந்தன

அன்று
வானம் தெளிவா́யிருந்தது
நண்பகல்
செங்கதிரோன்
வாடையை
கதகதப்பாக்கிக் கொண்டிருந்தான்

அவன் நதியோரப்பாறையில் அமர்ந்திருந்தான்
உழைப்பு அவனுக்கு உவர்ப்பு
ஆயுதங்களையும் தொடுவதில்லை
உழைக்காதவனுக்கு உணவில்லையாதலால்
நட்சத்திரங்களோடு பேசிக்கொண்டு
நதி நீரைக்குடித்து வாழும் நலிந்த தேகம்

திடிரென்று
பகலவன் முகத்தில் கரும்புள்ளி
நேரம் ஆக ஆக அதிகரித்தது கரும்புள்ளி
முன்னொரு நாள் கண்டது
நினைவு வர
ஊரைக் கூவியழைத்தான் - இதற்குள்
ஊரை இருள் கவ்வ ஆரம்பித்தது

நதியோரம் கூடியது ஊர்
பகலவனை இருள் தின்ன
ஊர்கூடி ஓப்பாரி வைத்தது - இதற்குள்
கண் இழந்தனர் பலர்

அவனோ ஊர்த்தலைவனின்
காதுகளில் மந்திரம் ஓதினான்
அதே மந்திரம் அனைவரும் ஓதி
கண்முடியிருக்க
சிறிது நேரம் கழித்து அடுத்த மந்திரம் ஓதி
கண் திறக்க
கதிரவன் இருளைத்தின்று
ஊரை வெளிச்சமாக்கியிருந்தான்

ஊர்கூடி
மந்திரம் ஓதியவனுக்கு மானியமும்
ஊர்ச்சபையில் உயர்ந்த பதவியும் அளித்தது

இவ்வாறாக
முதல் மந்திரம் எழுதப்பட்டது

பின்
வசிஷ்டனும்
விசுவாமித்திரனும்
தசரதன் காதுகளில் ஓதினர்

பிறகு
வால்மீகியோ
தனது மந்திரங்களால்
இராமராஜ்யத்தை நடத்தினான்

ஆகா!
வேதவியாசன்
அள்ள அள்ளக் குறையாத
வேத ஊற்று அல்லவா! அவனது அஸ்தினாபுரம்

இவ்வாறாக
இது போன்றே
உலகெங்கிலும்
வெவ்வேறு இடங்களில்
வெவ்வேறு காலங்களில்
தீர்க்கதரிசிகளும்
முனிவர்களும் தோன்றி
வேதம் ஓதினர்

வேதங்கள் பெருகின
உயர்பதவிகள் பெருகின
மான்யங்களால் ஊர்ச்சபை பிரிந்து
வேதபுரிகள் தோன்றின

இப்போதெல்லாம்
வேதபுரியில் வேதங்கள் எரிக்கப்படுகின்றவாமே
அட! ஆம் வேதபுரத்துக் கொடிகள் எரிகின்றனவே!
கூட எரிவதென்ன? அது ஓடி கிழே விழுந்து துடிதுடிக்கிறதே!
அதற்கப்பால் என்ன சத்தம்?
அந்த பெரிய கும்பல் சிலரை
வீட்டிற்க்குள் வைத்து....
அட! அந்த வீடு கொளுத்தப்பட்டுவிட்டதே!
இரத்தம் வழிய உயிர் போகும் தருவாயிலும் அவன் கண்களில் ஏன்
கொலைவெறி?
என்னைச் சுற்றி என்ன? புகை மூக்கையடைக்கிறதே!
தோல் எரிகிறதே!
நான் அணிந்திருப்பது ஒரு வேதக்கொடியின் வண்ணமல்லவா!
ஆ....ஆ...


( இந்தக்கவிதை குஜராத் கலவரங்களின்போது எழுதப்பட்டது.
இதில் குறிப்பிடப்பட்டுள்ள சூரியகிரகண கதை அமைப்பு கலில் ஜிப்ரானின் சிறுகதை ஒன்றில் சந்திரகிரகண நிகழ்வாக காட்டப்பட்டுள்ளதை தழுவியதாகும் )

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக