திங்கள், ஏப்ரல் 12, 2004

ஓடை பழைய படைப்புகள் 18

ஓடை மே 2000 தாள் 6

புழு வாழ்வு -- கைகாட்டி

'படிப்பு முடிஞ்சுதா
அடுத்து என்ன பண்றாப்புல?'
எந்துபல் தெரியக் கேட்ட
எண்ணெய்க்கடைக் காரருக்கும்,

'அண்ணன் மாதிரி நீயும்
கவர்மெண்டு உத்தியோகத்துக்குப் போ'
என்று யோசனை சொன்ன
காய்கறிக் காரனுக்கும்

'தம்பிக்கு வேல கெடச்சாச்சா'
வெற்றிலையோடு என்னையும்
சேர்த்து மென்று துப்பிய
அப்பாவின் நண்பர்களுக்கும்

'ஏதோ தம்பி, வேல வந்ததும்
நாலு எழுத்துப் படிக்க வெச்ச
அப்பா, அம்மாவ மறந்துடாத'
குளிக்கப் போன இடத்தில்
சோப்போடு சேர்த்து
அரித்துப் புண்ணாக்கிய
பக்கத்துத் தோட்டத்துக் காரனுக்கும்,

'என்ன பண்ணிக்கிட்டிருக்கே'
என்று கடைவீதியில் கேட்கும்
கோரப்பல்லுடனும், பாம்பு நாக்குடனும்
திரிகின்ற ஒருநூறு பேருக்கும்

'ரிசல்ட்டு இன்னும் வரல
வந்த பின்னாலதான் எதுவும்'

சொல்ல வைத்திருந்த பொய்யை
செல்லாததாக்கினான்
புரொவிசனல் சர்டிபிகேட்டு
கொணர்ந்த
ஓட்டைவாய்த் தபால்காரன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக