புதன், ஏப்ரல் 07, 2004

துளி-16 ,துளி-17

எல்லாம் இன்பமயம் - வெங்கடேசன் சித்திரவேல்.

எங்கும் இன்பம் எல்லாமே இன்பம்,எதிலும் இன்பம்,யாவும் இன்பம்!!!!!

இன்பம் என்றால் என்ன என்று , என்று நாம் காணத் தொடங்கினோம், உணரத்தொடங்கினோம், அதற்காக மனம் ஏங்கத்தொடங்கினோம். உண்மையில் இன்பம் என்பது மனதோடு தொடர்புடையது. புத்திக்குப் பக்கத்தில் எப்போதாவது செல்வது.மாயைக்கு தோழி.

கடும் குளிருக்கு சூடு, கடும் வெயிலுக்கு நிழல், என்பது இயற்க்கையோடு தொடர்பு கொண்ட விசயம், ஒன்றுக்கு ஒன்று முரண் படும் விசயம் ஒன்றுபடும் போது அங்கே ஒருவித தன்னிலை மறந்த ஒரு நிலை ,அது தான் இன்பமா?

தண்ணீர் தாகம் எடுத்த போது தண்ணீர் கிடைக்காமல் இங்கும் அங்கும் அலைந்து களைத்து வருகையில் தொலைவில் ஏரி ஒன்று தென்படுவதும், அங்கே காற்றின் இசையமைப்பிற்கு ஏற்ப நடனமாடிக்கொண்டிருக்கும் தண்ணீரைக் கண்டவுடன் சோர்வு போன இடம் தெரியாமல் போக ,தள்ளாடிய கால்கள் தாவி ஓடி , தண்ணீரை வாரி அள்ளி வாயில் இட்டு மனம் கொள்ளும் ஒரு இனம் தெரியாத புதினம் தான் இன்பமா?

காலை எழுந்தது முதல் மாலை தலைகவிழ்த்து உடலுக்கு ஓய்வழிப்பது வரை உலகோர் அனைவருக்கும் உணவளிக்கும் வண்ணம் இயற்க்கையோடு பொருந்தி இயற்க்கையின் தன்மையை நன்குணர்ந்து அதன் ஒத்துழைப்புடன் தன்னுழைப்பையும் ஒன்று சேர்த்து , பசுமை புரட்சி நடத்திய களைப்பிலும்,புரட்சியின் வெற்றிக் களிப்பிலும் சற்று அயர்ந்த அந்த சிறு இடைவெளியில் தேச நல விரோதிகள் கைவண்ணம் காட்ட கட்டிய வேட்டியுடன் நழுவிய நமது விவசாயி , தனக்கு வாழ்வளிக்க தனது பசுமைப் புரட்சி வெற்றியை தானே தக்க வைத்துக்கொள்ள அரியதொரு வாய்ப்பை அரசாங்கம் அறிவித்ததும், தனது கடன் சுமை எல்லாம் தீர்ந்து விடும் ,புது மனை கட்டி குடியேறலாம்,மகளுக்கு நல்ல தொரு வரன் பார்க்கலாம், இளைய மகனுக்கும் மகளுக்கும் நல்ல கல்லூரியில் இடம் வாங்கலாம் ,மனைவியின் தங்க செயினை வங்கியிலிருந்து திருப்பி ,கழுத்தில் போட்டு அழகு ப'ர்க்கலாம் என்று தன்னை மறந்து தன்னை சூழ்ந்தாரை பற்றியும் அவர்களது எதிர் காலம் பற்றியும் நினைத்து மகிழும் அந்ததொரு நல்ல தருணம் தான் இன்பமா?

பருவம் பருகி வயதுக்கு வந்தவுடன் தனக்குகந்த மணமகனை தேர்ந்தறிந்து,மண நாளும் பெரியவர்களால் குறிக்கப்பட, சந்தோச சகவாசமுடன் மணமேடை அமர்ந்து மாங்கல்யம் தாங்கி ,பிறந்த வீடு பிரிந்து ,கைப்பிடித்தவரது வீட்டில் காலடி வைத்து ,இவ்வீட்டில் என்றும் மங்கலம் நிறைந்து விளங்கட்டும் என்று பெண் தெய்வங்களை வணங்கி, குத்து விளக்கு ஏற்றி எங்கும் ஒளிமயமாய் விளங்க செய்து குடும்பப் பொருப்புகளை பொருப்புடன் ஏற்று ,தனக்ககாக பிறந்து வளந்தவனை ,தன்னுடன் வாழ்க்கைப்பயணம் செய்ய கடைசி வரையிலும் உடன் வரும் தன் கண்ணொத்தவனை ,கணவனை உள்ளம் நிறையன்புடன் ஆரத்தழுவி அணைத்து மகிழும் அத்தாரகை ,அந்த முதல் நாளில் கொள்ளும் அளவில்லா சொர்க்க நிலை தான் இன்பமா?

நல்ல அறம் காண்பதன் பொருட்டு தோன்றிய இல்லறவாழ்வில் தன்னோடு தன் இயல் ஒத்த மற்றொரு ஆன்மாவை உதவிக்கு அனுப்ப வேண்டி, முன்பிறவியில் செய்த தவத்தின் பால் இறைவனால் நமக்காக அனுப்பப் பட்ட நம் இயல் ஒத்த மற்றொரு ஆன்மாவோடு இணையும் அந்த நல் வேளையில் தங்கள் இயல்புகள் ஒன்று கலந்து 'தான்' மறந்த அந்த சுக வேளையில் இறையால் நமக்குள் எழச்செய்யும் புதிதொரு ஆன்மாவை ,ஓருயிர் தாங்கி, புதியதொரு உடற்கூடை, அன்பளிப்பாய் வழங்கி,இப்புவியில் இறக்கி,பிறவிப் பயனை பெற வாழ்வாங்கு வாழ்த்தி, அந்த அறிய வாய்ப்பளித்த பகவானாம் பரம்பொருளை, 'தான்' மறந்து வணங்கி அப்பரம்பொருளின் தன்மையை தன்னில் உணர்ந்து, மனம் புத்தி என்று வெவ்வேறாய் தெரியும் அந்த ஆன்மாவை 'ஒரே' பொருளாய், அனைத்தும் கொண்டு விளங்கும், 'ஒரே' பொருளின் தன்மையை உணர்ந்து அதன் பெருமத்தின் தன்மையை,கணக்கிட முடியாத உன்னதத்தை உணர்வால் மட்டுமே உணர்ந்து உருகும் ,அந்த ஏகாந்த நிலையே யாருக்கும் சொல்ல தெரியாத ,சொல்ல முடியாத நிலையே ஈடு இணையில்லா இன்ப நிலை. மற்றைய இன்பங்களோடு ஒப்பிட முடியாத நன்னிலை.


வெங்கடேசன் சித்திரவேல்.

jpg வடிவில் இங்கு படிக்கலாம்