சனி, செப்டம்பர் 23, 2006

மழை 4 துளி 7

கனவு (மட்டுமே) காணுங்கள்

ம.ஜெயப்பிரகாஷ வேல் (பயணம் புதிது ஜன-பிப் 2004 )

"வேலையே அதன் விருது. இந்தியச் சூழலில் அறிவியல் துறைக்கு முற்றிலும் பொருந்தும். ஏனெனில் இங்கு வேறெந்த வகையிலும் எந்தவொரு அங்கீகாரமும் கிடைக்கப் போவதில்லை " -ஹேது.சி.ஷேத் (டிசம்பர்-1999 -கரன்ட் சயன்ஸ் இதழ் ) "இப்போது மாணவர்களிடயே விஞ்ஞானக் கல்வி நாட்டம் குறைந்துள்ளது. இன்னும் சில ஆண்டுகளில் ஆராய்ச்சி நிலையங்களில் விஞ்ஞானப் பட்டதாரிகளுக்குத் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உள்ளது. 50 ஆண்டுகளுக்கு முன்னால் விஞ்ஞானக் கல்வி படிக்க மாணவர்கள் அதிக ஆர்வம் காட்டினர். திறமையான மாணவர்கள் விஞ்ஞானக் கல்வியை ஏன் விரும்புவதில்லை என்று ஆய்வு நடத்த வேண்டும். விஞ்ஞானக் கல்வி படித்தவர்களுக்கு வேலை வாய்ப்பை அதிகரிக்க வேண்டும். விஞ்ஞானத்தில் முனைவர் பட்டம்(Ph.D) பெற்ற இந்தியர்களை வெளிநாட்டு நிறுவனங்கள் கவரத் தொடங்கி உள்ளன. அதைத் தடுத்து நிறுத்த வேண்டும் " - பிரதமர் அ.பி.வாஜ்பாய் (புது தில்லியில் ஸ்வரூப் பட்நாயக் விருது வழங்கிப் பேசுகையில்; புதுதில்லி. ஜூலை-3-2003; தினத்தந்தி) கல்வி இந்தியா போன்ற வளரும் நாடுகளில் அறிவியல் முன்னேற்றம் ஒரே நாளில் வந்துவிடாது. அலாவுதீனின் அற்புத விளக்குக்கு நாம் ஆசைப்படவும் கூடாது. ஒரு வளரும் நாடு வளர்ந்த நாடாவதற்குத் தற்சார்புடைய அறிவியல் முன்னேற்றம் பெரும் காரணியாக விளங்குவதால், இந்தியாவின் அறிவியல் முன்னேற்றம் முக்கியமான இடத்தைப் பெறுகிறது. அத்தகைய தற்சார்புடைய அறிவியல் முன்னேற்றத்திற்காக அடிப்படையில் இருந்தே வலிமையாக ஆரம்பிக்க வேண்டியதாக உள்ளது. நமது கல்வி முறையில் அறிவியலைக் கற்கும், கற்பிக்கும் முறைகளில் பெரும் மாறுதல்கள் தேவை. சுண்ணாம்பு நீரை பால்போல மாற்றும் வாயு கார்பன் டை ஆக்சைடு என்பதை அசோகர் மரம் நட ஆரம்பித்த காலத்திலிருந்தே கற்பித்து வருகிறார்கள். மாணவர்களும் ஐந்து மதிப்பெண்களுக்காக அதை மனப்பாடம் செய்து எழுதுகிறார்கள். கல்வித்துறையில் புதிய அறிவியலை, தற்கால அறிவியலைப் புகுத்த வேண்டும். பாடத்திட்டங்கள் நிகழ்கால அறிவியலைப் பிரதிபலிப்பவையாக இருக்க வேண்டும். ஏனெனில் முன்னேற்றம் என்பது நன்கு தயார்படுத்தப்பட்ட மனங்களின் வலிமையான கரங்களிடம் உள்ளது. கற்பிப்பவர்களும், புத்துப்புது அறிவியல் முன்னேற்றங்களையும் மாறுபட்ட கருத்துக்களையும் மாணவர்களுக்கு அறிமுகம் செய்து ஆர்வமூட்டுபவர்களாக இருக்க வேண்டும். எல்லாவற்றிற்கும் மேலாக சம்பளத்திற்காகக் கற்பிப்பது, மதிப்பெண்களுக்காகப் படிப்பது என்ற மனோபாவம் மாற வேண்டும். அங்கீகாரம் அறிவியலின்பால் அதீத ஆர்வம் மட்டும் நல்ல முன்னேற்றத்தைத் தந்துவிடாது. அதனை ஏற்றுக் கொள்கிற ஆரோக்கியமான சூழலும் அதற்கேற்ற அங்கீகாரமும் கிடைக்கிறபோதுதான் அதன் உண்மைப் பலனை அடைய முடியும். மக்களுக்கும் அறிவியலாளர்களுக்கும் இடையே உள்ள இடைவெளி குறைய வேண்டும். காலையில் பல்துலக்கி இரவில் இமைமூடித் தூங்கும் அளவுக்கு அவர்களும் மனிதர்கள்தான் என்பதை மக்கள் உணர வேண்டும். அறிவியல் மந்திரம் போன்றதல்ல; மக்களுக்கானது என்பதை அறிவியலாளர்களும் தெளிவுபடுத்த வேண்டும். செய்தி ஊடகங்களின் பலத்தை அறிவியல் துறையினர் நன்கு பயன்படுத்திக் கொள்ள வேண்டும். அவற்றின் அறிவியல் முன்னேற்றங்களும் புதிய தொழில் நுட்பங்களும் எல்லோரையும் சென்றடையும் வண்ணம் செய்ய வேண்டும். அரசின் விரிவாக்க மையங்கள் இவற்றின் நேரடிப் பயன்பாட்டிற்குப் பாதையாக இருக்க வேண்டும். அரசும் அறிவியல் உலகமும் நெருங்கி வரவேண்டும். ஒருங்கிணைந்து செயல்படவேண்டும். நிதி ஒதுக்குவது - ஆய்வு முடிவுகள் பெறுவது என்ற நேர்கோட்டில் கடிவாளமிட்ட குதிரையாய்ப் பயணம் செய்வது பலன் தராது. கொள்கையளவிலான புதிய முடிவுகளைக் கூட்டாகச் சேர்ந்து நிர்மாணம் செய்து அதை நோக்கிச் செயல்பட வேண்டும். நிதியுதவி பெறுவது, விருதுகள் அளிப்பது பரிசுகள் வழங்குவது போன்றவற்றில் தனிநபர் செல்வாக்கு தவிர்க்கப்பட வேண்டும். உண்மையான உழைப்பு அங்கீகரிக்கப்படும்போதுதான் அது தன் உண்மையான பலனை அடைகிறது. எனவே விருதுகளும் கவுரவங்களும் முறையானதாக இருக்க வேண்டும். நிதியுதவி நமது நாட்டில் நடத்தப்படும் பெரும்பாலான ஆய்வுகளுக்கு அரசே நிதியுதவி அளிக்கிறது. நாட்டின் மொத்த வளத்தையும் இதிலேயே முடக்க முடியாது. நிதியுதவிக்கான அரசின் கொள்கைகள், ஆய்வு நாட்டம் ஆகியன உள்நாட்டு தொழில் முனைவோர்களிடம் வரவேற்பைப் பெறுவதாக அமைதல் அவசியம். அரசு, நம் இந்தியச் சூழலுக்கு உகந்ததாக, நேரடிப் பயன்பாட்டை நல்குவதாக அமையும் ஆய்வுகளை ஊக்குவிக்க வேண்டும். எந்தவொரு அறிவியல் முன்னேற்றமோ புதிய தொழில் நுட்பமோ தொழிற்புலத் தேவைகளை நிறைவு செய்வதாக அமைதல் நலம் பயக்கும். எனவே ஆய்வுகளுக்கான நிதியுதவிகளில் உள்நாட்டுத் தொழில் முனைவோர்களுடைய பங்களிப்பும் தேவையாக இருக்கிறது. தொழில் முனைவோர்களிடம் கட்சி வளர்ச்சி நிதி வசூலிப்பதை விடவும் அவர்களை ஆய்வுப் பங்களிப்புக்கு உதவச் செய்வது நாட்டின் முன்னேற்றத்தைத் துரிதப்படுத்தும் என்பதை அரசை நிர்வாகம் செய்பவர்கள் உணர வேண்டும். வாழ்வியல் மேம்பாடு அறிவியல் புலத்தில் ஆய்வு மேற்கொள்ளுபவர்களின் வாழ்வியல் முன்னேற்றத்தில் கவனம் நிறைய செலுத்த வேண்டும். நிறைய புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்குவதும், குறைந்தபட்ச வயதுவரம்பைத் தளர்த்துவதும் மற்றும் உலகளாவிய வாய்ப்புகளை ஏற்படுத்தித் தருவதும் புதிய மாற்றங்களை ஏற்படுத்தும். ஆய்வு மேற்கொள்ள நடத்தப்படும் தகுதித் தேர்வுகளில் வெற்றிபெறும் மாணவர்களுக்கு வேலை உறுதி செய்யப்பட்டால் நிறைய மாணவர்கள் வெளியேறுவது குறையும். பதிப்புத்தரம் இந்திய ஆய்விதழ்களின் தரம் உயர்த்தப்பட வேண்டும். நமது அறிவியலாளர்களும் முக்கியமான ஆய்வு முடிவுகளை உள்நாட்டு ஆய்விதழ்களில் வெளியிட முன்வர வேண்டும். தன் வாழ்நாளில் சர்.சி.வி ராமன் சுமார் 15 கட்டுரைகளை மட்டுமே வெளிநாட்டு ஆய்விதழ்களில் வெளியிட்டுள்ளார். மீதமுள்ள 200-க்கும் மேற்பட்ட ஆய்வுக்கட்டுரைகள் உள்நாட்டு இதழ்களில் வெளியிடப்பட்டவை. பதிவு செய்யப்பட்ட ஆய்வுக்கட்டுரைகளை, புதிய தொலைநுட்ப அறிவுகளைப் பயன்படுத்த , எளிதானவைகளாக மாற்ற , உலகளாவிய ஒருங்கிணைப்பு தேவை. காப்புரிமை இந்த இடத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது. ஆய்வுக்குரிய செய்முறைகள் சிலவும், குறிப்பிட்ட சில பொருட்களும் காப்புரிமை பெறப்பட்டு அவற்றின் தடையற்ற உபயோகம் தடுக்கப்பட்டுள்ளது. (இது குறித்த விரிவானதொரு கட்டுரை டிசம்பர் 2003 'உயிர்மை' இதழில் வெளிவந்துள்ளது.) ஆய்வுகளின் முக்கியத்துவம் மேற்கொள்ளப்படும் ஆய்வுகள் நம் நாட்டுக்கு பயனளிப்பவையாக இருப்பது அவசியம். அணுகுண்டுகள் சொந்தமாக தயாரித்து வெடித்தும் விட்டோ ம். அதனால் பெரிதாக ஒன்றும் ஆகிவிடவில்லை. பதிலுக்கு பாகிஸ்தானை அணுகுண்டு தயாரிக்கத் தூண்டியுள்ளோம். நமது நாட்டுக்கு என்ன தேவையோ, நம்மால் எதை நன்றாகச் செய்ய முடியுமோ அதை நமக்கேயுரிய தனித்துவத்துடன் செய்தால் அறிவியல் உலகில் மிளிரலாம். அடிப்படையில் இந்தியா ஒரு விவசாய நாடு. செயற்கைக்கோள் ஏவுவதை விடவும், அடுத்த நாட்டுக்குக் கார் செய்து அனுப்புவதை விடவும் நம்மால் விவசாயத்துறையில் நிறையச் சாதிக்க முடியும். பேராசிரியர் ஜோஸ் சோல்டம்பர்க் (பிரேசில்) அவர்களின் "நம்மைப் போன்ற வளரும் நாடுகளில் இருக்கும் அறிவியல் முன்னவர்கள் அமெரிக்கா போன்ற வளர்ந்த நாடுகளின் ஆய்வு மாதிரியைப் பின்பற்றுவதை விடவும், நமது சொந்த, உள்நாட்டுச் சூழலுக்கு தகவமைத்துக் கொண்டு தொழில்நுட்ப முன்னேற்றங்களை ஏற்படுத்த வேண்டும். அதன் மூலம் கல்வித்துறை, அரசு மற்றும் தொழில்துறைக்கான வளர்ச்சிகளை உருவாக்க வேண்டும். முன்னேற்றத்தின் முதல்படி இதுதான் " என்ற கருத்து கவனிக்கத்தக்கது, இவரின் கருத்துக்கு விரிவான ஆதாரம் உதாரணமாக உள்ளது. பிரேசில் அடிப்படையில் விவசாய நாடுதான். முக்கியமாய் கரும்பு. அவர்கள் கரும்பிலிருந்து குறைந்த செலவில் ஆல்கஹால் தயாரிக்கும் தொழில்நுட்பத்தையும், அதை பெட்ரோலிய எரிபொருட்களுக்கு மாற்றாக உபயோகிக்கும் முறைகளையும் உருவாக்கினர். தற்போது அந்த நாடு தன் எரிபொருள் தேவையில் சரிபாதிக்கும் மேலாக ஆல்கஹாலைக் கொண்டு பூர்த்தி செய்து கொள்கிறது. தற்போது வளர்ந்த நாடுகளில் கூட வெற்றிகரமாக இல்லாத அந்த மாற்றுவகை தொழில்நுட்பத்தை முற்றிலும் உள்நாட்டு விஞ்ஞானிகளால் உள்நாட்டிலேயே சாத்தியமாகக் காரணம் அவர்களின் பாரம்பரிய வளம்/பலம் புரிந்துகொள்ளப்பட்டு சரியான முறையில் அணுகப்பட்டதே ஆகும். ஆய்வுகளில் அடிப்படையான சுகாதாரப் பிரச்சினைகளுக்கும், ஆதாரமான விவசாயத்திற்கும் முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும். செல்போனில் எதிர்க்குரல் தெளிவாகக் கேட்பதை விடவும் நிமிடத்துக்கு நான்கு பேரைக் கொல்லும் காசநோயைக் குணப்படுத்துவது அவசியம், அவசரம்; அமெரிக்காவில் சிலிக்கன் பள்ளத்தாக்குகளில் அதிகம் விழுந்து கிடப்பது இந்தியர்கள்தான் என்பதைவிடவும் மழை பொய்த்து, கருகும் பயிர்களும், வெடிக்கும் நிலங்களும் காக்கும் உழவர்களின் நிலை உணர்ந்து நோக்கத் தக்கது. உள்கட்டமைப்பு பல்கலைக்கழகங்கள் கல்விக்கூடங்கள் ஆய்வு நிறுவனங்கள் முதலியன 3*, 5* முதலான பலவகைக் குறியீடுகளால் தரப்படுத்தப்பட்டுள்ளன. இந்தத் தரவரிசைகளின் நோக்கம் தலைகீழாகி விட்டது. தரவரிசையில் மேலே உள்ள நிறுவனக்களுக்கு அரசு அதிக அளவில் நிதியுதவி அளிக்கிறது. கீழ்நிலையில் உள்ள நிறுவனங்களின் கண்ணில் சுண்ணாம்பு வைக்கிறது. மாறாக, கீழ்நிலையில் உள்ள நிறுவனங்கள் அதிக நிதியுதவியுடன் தரத்தில் மேம்பட உதவ வேண்டும். மத்திய அறிவியல் தொழில்நுட்பத் துறை(DST) FIST போன்ற நடவடிக்கைகளால் ஆய்வு நிறுவனங்களின் குறிப்பிட்ட துறைகளை மேம்படுத்தி வருகிறது. இவற்றை வளராத நிறுவனங்களின் துறைக்கும் புகுத்த வேண்டும். சில அவசியமான, விலையுயர்ந்த கருவிகளைப் பயன்படுத்தவும், சிக்கலான செய்முறைகளைச் செய்யவும் மத்திய அரசு, மண்டலம் வாரியாக RSI (Regional Sophisticated Instruments Counter) எனப்படும் அமைப்புகளால் உதவி வருகிறது. இவற்றை மேலும் விரிவுபடுத்தி நிறைய ஆய்வு நிறுவனங்கள் பயன்பெற ஏதுசெய்ய வேண்டும். அரசு மற்றும் தனியார் ஆய்வு மையங்களிடையே கருத்துப் பரிமாற்றம் பரஸ்பர ஒத்துழைப்பு அமைய வேண்டும். அமைப்பு அரசு நிறுவனங்களின் அதிகார அடுக்குகள் மறு நிர்மாணம் செய்யப்பட வேண்டும். நிதி வழங்குவது, பயன்பாடு முதலியன எளிமையாக்கப்பட வேண்டும். ஆய்வு மாணவர்களின் நலன் கவனத்தில் கொள்ளப்பட வேண்டும். ஆய்வுக்களத்தில் நேரடியாக நின்று செய்பவர்கள் மாணவர்கள்தான். அவர்களுக்குச் சம்பளம், பட்டம் முதலியன முறையாக வழங்கப்படுவது அவசியம். நிதியாதாரப் பயன்பாடுகளை எளிதாக்கும் அதே வேளையில் அவற்றின் முறையான உபயோகம் குறித்த சரியான கண்காணிப்பும் தேவை. ஆய்வுப்பணிகளின் இடைக்கால முன்னேற்றம், முடிவுகளின் நம்பகத்தன்மை, அவற்றின் பயன்பாடு முதலியன கவனமாக , கடுமையாகப் பரிசீலிக்கப்பட வேண்டும். பெரும்பாலான அரசுத்துறைகளைப் போலவே அறிவியலிலும் அமைப்புக் குறைபாட்டால்தான் அதிக பாதிப்பு ஏற்படுகிறது. தொடர்ச்சியற்ற நிதி ஒதுக்கீடு மற்றும் நிர்வாகக் குளறுபடிகளால் திரு மேனன் தலைமையில் கோலார் தங்கவயலில் நடத்தப்பட்ட முக்கியத்துவம் வாய்ந்த ஆய்வுகள் பாதியில் நிறுத்தப்பட்டன. அது சம்மந்தமான முழுமையான ஆய்வுகளை மேற்கொண்ட ஜப்பான் விஞ்ஞானிகள் அதற்காக நோபல் பரிசும் வென்றனர். பசுமைப் புரட்சி காலங்களில் உரம், பூச்சிமருந்து போன்றவை சரியான முறையில் விநியோகிக்கப்படாததும் அறிவியல் பூர்வமான கருத்துக்கள் சாதாரண மக்களைச் சென்றடையாமல் போனதும் நிர்வாகச் சீர்கேடுகளின் சாதனையே. தமிழக அரசின், 'மகளிருக்கான உயரிய தொழில் நுட்பப் பூங்கா' அறிவிக்கப்பட்டு ஆண்டுகள் பல ஆகியும் முழுப்பயன்பாட்டிற்கு இன்னும் வரவில்லை. உலகில் வேறெங்கும் உள்நிறுவனங்களோ கிளைகளோ இல்லாத உலக வங்கி சென்னையில் அலுவலகம் துவக்க உதவியதில் இருந்து - வாடகைக் கட்டிடத்தில் வாடியவர்களுக்குச் சொந்தக் கட்டிடம் கட்ட நிலம் ஒதுக்கியது வரையில் எல்லாம் துரிதமாக நடக்கின்றன. இந்திய மாணவர்கள் வெளிநாட்டுக்குப் போய்விடுவது பற்றி இங்கே கவலைப்படும் பிரதமர் அமெரிக்காவில் NRI-க்களின் முதலீடுகளுக்கான விருந்தில் கலந்து கொள்கிறார். எல்லா வளமும் உள்ளது. இயற்கை வளம், மக்கள் வளம், அறிவு வளம் என எதிலும் குறைவில்லை. முன்னேற்றத்துக்கான உண்மையான நோக்கமும், சரியான உழைப்பும் கைகோர்க்கும்போது அறிவியல் உயரும். நாடும் நிமிரும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக