வெள்ளி, ஜூன் 07, 2013

மழை-8, துளி-8 : ஜல்லி


ஜல்லி – சகாரா


மழைக்கொதுங்க

வெயிலுக்குப் பதுங்க

இருந்த வீடு சரிந்துபோக

கூரை நிமிர்த்த வழியில்லை.

 

மரத்தடிக்கு வந்துவிட்டது குடும்பம்.

பறந்து வரும் செம்மண் புழுதியால்

பாத்திரம் நிறையும்.

 

கிளைதாங்கும் சேலைத் தொட்டிலில்

ஏனோ பிறந்த சிசு,

தாலாட்டத் தெம்பின்றி

சாரக் காற்றில் நாநடுங்க,

அடிவயிற்றில் நெருப்பெரியும்.

தாயின்

பால்வற்றிய மார்பகத்தில்

கண்ணீர் கசியும்.

 

சாகுபடி செய்ய முடியாமல்

ஓணான் முட்டையிடும் பரம்பரைச் சொத்து -

முக்காலேக்கர் கல்லுக்காடு

அப்பன் சாவெரித்த

வெட்டியான் கடனுக்குப் பத்தாது.

 

ஆனாலும் எப்படியோ

அவனால் மட்டும் முடிகிறது

எதிர்த்தவீட்டுச் சிறுக்கியோடு -

இனிமையாய்ப் பொழுதுபோக்க.


நன்றி: முள்ளின் நுனியிலும் ஆகாயம் கவிதைத் தொகுப்பு

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக