வெள்ளி, ஜூன் 07, 2013

மழை-8, துளி-7 : அம்மாவுக்கு


அம்மாவுக்கு  - கைகாட்டி


நம்மிடையேயான  உறவு
அப்படியொன்றும் அன்புமயமானதில்லை
கடைசியாய்ப் பிறந்ததால்  தருவதற்கு 
அன்பு மிச்சமில்லாமல் போயிருக்கலாம்.
 
ஐந்தாறு வயதில்
மாடுமுட்டித் தள்ளியபோது
மருத்துவமனைக்குத் தூக்கிச் சென்றது தவிர
கருணையான நிகழ்வுகள்
எதுவும் நடந்ததாய் நினைவில் இல்லை.
 
வீசப்பட்ட  பருப்பு மத்தும், தட்டு, கரண்டிகளும்
தென்னை மாரினால் விளாசிக் கிழிந்த முதுகும்
கனவில்  அவ்வப்போது வந்து பயமுறுத்தும்.
 
14 வயதில்
என் சைக்கிளின் பின்னிருந்து நீ கீழே விழுந்ததின்
குற்ற உணர்ச்சி எனக்கு இன்றும் இருக்கிறது.
இப்போது கார் இருக்கிறது
என்றாலும்,
நீ விழுவதைத் தடுக்க இயலாது என்னால்
இனி முடியாதென்கிறார் மருத்துவர்.
எழும் நம்பிக்கையோடு
அரை நினைவில் தூங்கும் உன்னிடம்
அறிவிக்க வழியற்று
அழுகையை அடக்கிக் கொண்டு நான்.

15-04-2013

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக